இங்கிலாந்தின் சவுத் ஆம்டன் நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயார்க் நோக்கி கடந்த 1912-ம் ஆண்டு ஏப்ரலில் சென்ற ‘ஆர்எம்எஸ் டைட்டானிக்’ கப்பல் வடக்கு அட்லான்டிக் கடலில் பனிப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.
பயணிகள், ஊழியர்கள் என 2,200-க்கும் அதிகமானோர் சென்ற கப்பலில் அவசர கால படகுகள் குறைவாக இருந்ததால், 710 பேர் மட்டுமே மீட்க முடிந்தது. 1500 பேர் பரிதாபமாக கடலில் மூழ்கி பலியாயினர். இதில் கேப்டன் ஸ்மித்தும் ஒருவராவார்.
இதனிடையே, இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஏலத்தில், பேரழிவின் நினைவுச்சின்னங்களில் ஒன்றான டைட்டானிக் கப்பலில் உயிர் காக்கும் மிதவைகளின்(லைஃப் ஜாக்கெட்) அலமாரியை திறக்க கப்பல் பணியாளர் பயன்படுத்திய சாவி பங்கேற்றது.
இதுதவிர, டைட்டானிக் கப்பலின் கேப்டன் எட்வர்ட் ஸ்மித்தின் வெளியிடப்படாத புகைப்படங்களும் விற்பனைக்கு இருந்தன.
இந்நிலையில் உயிர் காக்கும் மிதவைகளின் சாவியானது 85 ஆயிரம் பவுண்டுகளுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. முன்னதாக 50 ஆயிரம் பவுண்டுகளுக்கு இந்த சாவி ஏலம் போகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்க்கப்பட்டதை விட கடந்த சில வருடங்களில் ஏலம் விடப்பட்ட டைட்டானிக் சம்பந்தப்பட்ட பொருட்களில் இதுவே அதிக தொகைக்கு சென்றுள்ளது.