ஸ்டீபன் ராஜ் என்ற மிகப்பெரிய ரவுடியைத் தேடி பிரபாஸ் வெளியூரிலிருந்து சென்னைக்கு வருகிறார். சென்னையில் அவரது நண்பரான பிரமானந்தம் மூலமாக ஸ்டீபன் ராஜை எப்படி சந்திப்பது என்று வழி கேட்கிறார். பிரம்மானந்தம் இதுவரை யாரும் ஸ்டீபன் ராஜை பார்த்து கிடையாது என்றும், அவருடன் நேரடியான தொடர்பு வைத்திருப்பது தமன்னாவின் அப்பா மட்டும்தான் என்றும் கூறுகிறார்.
ஆனால், தமன்னாவின் அப்பாவை சந்திப்பதற்கே பல தடைகளை அவர் தாண்ட வேண்டியிருக்கிறது. அப்படியிருந்தும், அவரால் தமன்னாவின் அப்பாவை பார்க்க முடிவதில்லை. இறுதியில், தமன்னாவை சந்தித்து அவளை காதல் வலையில் சிக்கவைத்துவிட்டால் எளிதில் அவளது அப்பா மூலமாக ஸ்டீபன் ராஜை சந்தித்துவிடலாம் என எண்ணுகிறார்.
அதன்படி, பாங்காக்கில் இருக்கும் தமன்னாவை சந்தித்து தன்னை அப்பாவி போல் காண்பித்து, தமன்னாவை காதல் வலையில் விழ வைக்கிறார். தன்னுடைய அப்பா ஸ்டீபன் ராஜ் என்ற மிகப்பெரிய ரவுடியுடன் சேர்ந்து ரவுடியிசம் செய்வது பிடிக்காமல்தான் பாங்காங்கில் வந்து இருப்பதாக பிரபாஸிடம் கூறுகிறார்.
அதற்கு பிரபாஸ் ஒன்றும் அறியாதவர்போல் தமன்னாவிடம் அவளது அப்பாவிடம் நைசாக பேசி ஸ்டீபன் ராஜ் பற்றிய தகவல்களை போலீசுக்கு கொடுத்தால் ரவுடியிசம் ஒழிந்துவிடும் என்று ஆலோசனை கூறுகிறார். அதற்கு தமன்னாவும் சம்மதிக்க, இருவரும் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள்.
சென்னைக்கு வரும் தமன்னா தனது அப்பாவிடம் நைசாக பேசி ஸ்டீபன் ராஜ் பற்றிய தகவல்களை கேட்டறிந்தாரா? பிரபாஸ் பெரிய ரவுடியான ஸ்டீபன் ராஜை தேடிவரக் காரணம் என்ன? என்பதை படத்தின் மீதிக்கதை.
பிரபாஸ் ஒரு முழுநீள ஆக்ஷன் ஹீரோவாக படத்தில் பக்காவாக பிரதிபலிக்கிறார். படத்தில் நிறைய ஆக்ஷன் காட்சிகள் உள்ளது. அதற்கேற்றார்போல் இவரது உடற்கட்டும் நம்மை வியக்க வைக்கிறது. தனது அப்பாவை கொல்ல வரும் நூற்றுக்கணக்கான ரவுடிகளை இவர் பந்தாடும் காட்சிகள் எல்லாம் பதற வைக்கின்றன. காதல் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் ரொமான்ஸ் கூட்டியிருக்கலாம்.
தமன்னா டான்ஸ், ரொமான்ஸ் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கவர்ச்சி விருந்து படைத்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இன்னொரு கதாநாயகியாக வரும் தீக்ஷா சேத்தும் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பிரபாஸின் அப்பாவாக வரும் கிருஷ்ணம் ராஜு அறிமுகமாகும் காட்சியே மிகவும் பிரம்மாண்டமாக அதிரடியாகவும் காட்டியிருப்பது சிறப்பு. வயதானாலும் கம்பீரமான தோற்றத்தில் வியக்க வைக்கிறார். பிரம்மானந்தம், எம்.எஸ்.நாராயணா வரும் காட்சிகள் காமெடி.
ராகவா லாரன்ஸ் இப்படத்தின் இயக்கம், நடனம், இசை என பன்முகம் காட்டியிருக்கிறார். ஒருவரே இத்தனை விஷயத்திலும் கவனம் செலுத்துவது மிகவும் கடினம். அப்படியே கவனம் செலுத்தினாலும் எதிலாவது ஒன்றில் கோட்டை விட்டுவிடுவர். ஆனால், ராகவா லாரன்ஸ் எல்லா விஷயத்திலும் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
குறிப்பாக, ஒரு ஆக்ஷன் கதைக்கேற்றவாறு ஒவ்வொரு காட்சிகளையும் மிகவும் மாஸாக செய்திருக்கிறார். ஆரம்பம் முதல் கடைசி வரை விறுவிறுப்புக்கு குறைவே இல்லாமல் காட்சிகள் நகர்கின்றன. சண்டைக் காட்சிகளிலும் வித்தியாசமான முறையை பயன்படுத்தியிருப்பது சிறப்பு.
ராம்பிரசாத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக இருக்கிறது. ஆக்ஷன் காட்சிகளில் இவரது கேமரா சுழன்று விளையாடியிருக்கிறது. ராகவா லாரன்ஸின் இசையும் படத்திற்கு பலம் கூட்டியிருக்கிறது. பாடல்கள் சுமார் ரகம்தான்.
மொத்தத்தில் ‘வீரபலி’ சூறாவளி.