நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்கள் அனைவரும் தங்களது தாயாருக்கு கௌரவம் அளிக்கும் வகையில் அவர்களது பெயர் பொறித்த பனியனை அணிந்து இருந்தனர்.
டோனியின் பனியனில் தேவகி, கோலியின் பனியனில் சரோஜ், ரோகித் சர்மாவின் பனியனில் பூர்ணிமா என்று அவர்களது தாயாரின் பெயர் இடம் பெற்றிருந்தது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து ஸ்டார் நிறுவனம் இந்த வித்தியாசமான ஏற்பாட்டை செய்திருந்தது.
இந்திய அணித் தலைவர் டோனி கூறும் போது, ‘நமது வாழ்க்கையில் எத்தனையோ தியாகங்களை செய்யும் தாயாரின் பங்களிப்பை அங்கீகரிக்கும் முயற்சி இது. என்னை கேட்டால் இதை எனக்கும், எனது தாயாருக்கும் உணர்வு பூர்வமாக எத்தகைய பிணைப்பு இருக்கிறது என்பதை பற்றியது என்பேன். அதற்காக தந்தையை புறக்கணிக்கிறோம் என்று கிடையாது. அவர்களும் நமது வாழ்க்கையில் மதிப்பு மிக்கவர்கள். என்றாலும் தாயாரின் பங்களிப்பை எந்த அளவுக்கு பாராட்ட வேண்டுமோ அந்த அளவுக்கு நாம் செய்வதில்லை’ என்றார்.
புதுமுக வீரர் ஜெயந்த் யாதவ் கூறுகையில், ‘சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்த முதல் போட்டியிலேயே எனது தாயாரின் பெயர் பொறிந்த பனியனுடன் விளையாடியது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. எனது அம்மா பெயர் லட்சுமி. அவர் இப்போது உயிருடன் இல்லை. ஆனால் வளர்ப்பு தாயார் ஜோதியின் பெயரையும் குறிப்பிட வேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் இருவரின் பெயரும் கலந்து பொறிக்கப்பட்டிருந்தது’ என்றார்.