மும்பை அம்போலி காவல் சரகத்திற்குட்பட்ட ஷாம்நகர் குடிசைப்பகுதியில் வீடு பார்ப்பதற்காக நேற்று 28 வயது பெண் தன் கணவருடன் சென்றுள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் அவர்களுக்கு உதவி செய்ததுடன், தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். நேற்று இரவு அந்த வீட்டில் தங்கியிருந்த சமயத்தில், அங்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல், இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.
இதுபற்றி அம்போலி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்து இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை நவம்பர் 4-ம் திகதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். தலைமறைவான ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
குற்றம்சாட்டப்பட்ட 8 நபர்களும் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களில் ஒருவர் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் இருந்ததாகவும் காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.