டெல்லி ஜவகர் பவன் பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ராம்கிஷன் கிரேவால் (70) தற்கொலை செய்து கொண்டார். ராணுவ வீரர்களின் நலனுக்காகவே இந்த முடிவை தான் எடுத்து இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக உடல் வைக்கப்பட்டு இருந்த ராம் மனோகர் லோகியா வைத்தியசாலைக்கு நேற்று மதியம் சென்றார். அவரை பொலிசார் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர்.
அதையும் மீறி ராகுல் காந்தி பலமுறை வைத்தியசாலைக்குள் நுழைய முயற்சி செய்ததால் பொலிசார் அவரை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் சில மணி நேரங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டார். அதேபோல் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலும் கைதாகி விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், முன்னாள் ராணுவ வீரரின் தற்கொலை சம்பவத்தை கண்டித்து டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் பேரணியில் ஈடுபட முயன்ற ராகுல்காந்தியை அம்மாநில பொலிசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இரண்டு நாட்களில் மட்டும் ராகுல் காந்தி மூன்று முறை கைது செய்யப்பட்டுள்ளார்.
துக்ளக் சாலை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ராகுல்காந்தி அங்கிருந்து ஒரு மணி நேரத்திற்கு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
விடுவிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, நரேந்திர மோடி அரசு ஜனநாயகத்தை கேலி கூத்தாக்குகிறது என்றும் தற்போதையை சூழல் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சியாக உள்ளதாகவும் கடுமையாக குற்றம்சாட்டினார்.