கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தின் மாவட்ட நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்தவர் வி.கே. உன்னிகிருஷ்ணன். குற்றவழக்கு ஒன்றில் இவர் மீது நீதிமன்றில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில் சமீபத்தில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
பிணையில் வெளிவந்த அவர் கர்நாடக மாநிலத்துக்கு தப்பி ஓடினார். அங்கு அவர் குடிபோதையில் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொலிசாருடன் கைகலப்பில் ஈடுபட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக கடந்த 6-ந் திகதி கர்நாடக பொலிசார் அவரை கைது செய்தனர். அதன் பின்னர் அவர் கேரளா அழைத்துவரப்பட்டார்.
இந்த விவகாரத்தில் நேற்று முன்தினம் கேரள ஐகோர்ட்டு உன்னிகிருஷ்ணனை நீதிபதி பதவியில் இருந்து பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.
இதில் மனமுடைந்த உன்னிகிருஷ்ணன் நேற்று காசர்கோடு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள தனது அலுவலக அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொலிசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.