திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொள்வதற்காக தி.மு.க. தலைமை கழக பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் லியோனி காரில் சென்றார்.
நாகல்நகரில் மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலையில் அவருடைய கார் சென்று கொண்டிருந்தது. அதே நேரம் அந்த சாலையில் இருந்து குறுக்குதெருவுக்கு செல்ல மணல் லாரி ஒன்று திரும்பியது.
சாலையில் இருந்து சிறிது மேடான பகுதியில் குறுக்குதெரு அமைந்திருந்ததால் லாரி மிகவும் மெதுவாக சென்றது. ஒருகட்டத்தில் அந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி செல்லத் தொடங்கியது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த திண்டுக்கல் லியோனியின் கார் மீது, லாரியின் பின்பகுதி பயங்கரமாக மோதியது.
இதில் காரின் ஒரு பகுதி சேதம் அடைந்தது. இதனால் காருக்குள் அமர்ந்து இருந்த திண்டுக்கல் லியோனிக்கு இடது கையில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.