பட்டதாரியான அபி சரவணன் படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இவருக்கு பெண்களை கண்டாலே அலர்ஜி. இதனால் பெண்களுடன் பழகுவதை வெறுத்து வருகிறார். ஆனால், இவர்கள் நண்பர்களோ பல பெண்களிடம் பேசி வருகிறார்கள்.
நாயகனின் இந்த குணமே அவர்மீது நாயகி அதிதிக்கு காதலை வரவழைக்கிறது. அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஆனால் அபி சரவணனோ அதிதியின் காதலை ஏற்க மறுக்கிறார். இந்நிலையில், தனது அப்பாவின் அறிவுரையை ஏற்று ஓட்டல் ஒன்றை தொடங்குகிறார் நாயகன். அபி சரவணன் தனது காதலை மறுத்தாலும், அவரை விடாமல் பின்தொடர்ந்து வருகிறார் அதிதி.
அபி சரவணன் பெண்களை வெறுக்க காரணம் என்ன? அதிதி, அபி சரவணனின் மனதை மாற்றி காதலிக்க வைத்தாரா? ஓட்டல் தொடங்கிய அபி சரவணன் அதை வெற்றிகரமான நடத்தினாரா? என்பதுதான் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அபி சரவணன், முந்தைய படங்களைவிட இதில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஒரு சில இடங்களில் செயற்கையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகிகளாக அதிதி மற்றும் ராஷிகா நடித்திருக்கிறார்கள். இதில் ராஷிகாவிற்கு மட்டுமே அதிக அளவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். அதிதி கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.
அபி சரவணன் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் புதுமுகங்கள் என்பதால் அவர்களிடம் சிறந்த நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. இருந்தாலும், அவரவர் தங்களுடைய பங்கிற்கு ஓரளவு நடித்திருக்கிறார்கள். நண்பர்களில் ஒருவரான அம்பானி சங்கர் சிறப்பாக நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் மகாநதி சங்கர், அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.
வழக்கமான கதையை வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சங்கர் பாண்டி. திரைக்கதை வலுவில்லாமல் இருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. காமெடிகள் பெரியதாக எடுபடவில்லை. சுவாரஸ்யமான காட்சிகளை வைத்திருந்தால் ரசித்திருக்கலாம். அடுத்தடுத்து என்ன காட்சிகள் வரும் என்று யூகிக்க முடியும் அளவிற்கு படத்தை கொடுத்திருக்கிறார்.
படத்திற்கு ஒரே பலம் எஸ்.எஸ்.குமரனின் இசை. இவரது இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். சூரியனின் ஒளிப்பதிவும் படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.
மொத்தத்தில் ‘பட்டதாரி’ மதிப்பெண் குறைவு.