பலுசிஸ்தான் மாகாணத்தின் முன்னாள் முதல் மந்திரியும், பழங்குடியின இனத்தின் தலைவருமான நவாஷ் அக்பர் கான் புக்தி, கடந்த 2006-ம் ஆண்டு அப்போதைய ராணுவ தளபதியும் நாட்டின் ஜனாதிபதியுமான முஷரப் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையின் போது கொல்லப்பட்டார். இதனால் அங்கு 2004-ல் நடைபெற்று வந்த ஆயுதம் ஏந்திய கிளர்ச்சி இவரது கொலைக்கு பிறகு தீவிரமடைந்தது.
புக்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் முஷரப் மற்றும் அவரது அரசில் உள்துறை மந்திரியாக பதவி வகித்த அப்தாப் கான் ஷெர்போ, முன்னாள் மாகாண உள்துறை மந்திரி சோயிப் நுஷேர்வன் உள்ளிட்டோர் மீது ஆகியோர் மீது தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், முஷரப் உள்ளிட்டோரை விடுதலை செய்து தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால், இந்த தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை எனவும் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளதாகவும் புக்தி மகன்களான ஜாமீல் புக்தி, சோஹைல் ராஜ்புத் ஆகியோர் தெரிவித்தனர்.
அதன்படி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு பலுசிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது முஷரப்புக்கு பிணையில் வரக்கூடிய பிடிவிராந்து பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது,
இந்த வழக்கு விசாரணை 2009-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து குற்றம் சாட்டப்பட்ட முஷரப் ஒருபோதும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் வாசிக்கப்படும் போது கூட முஷரப் நீதிமன்றத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.