உலகின் மிகவும் வயதானவராக கருதப்படுபவர் இத்தாலி நாட்டை சேர்ந்த எம்மா மோரேனோ. உலக சாதனை அமைப்பின் படி, உலகிலேயே மிக வயதான நபர் எம்மா தான். 1899-ம் ஆண்டு நவம்பர் 29-ம் திகதி பிறந்த எம்மா, 19-ம் நூற்றாண்டில் பிறந்து, உயிர் வாழும் கடைசி நபர்.
இத்தாலியின் எம்மா மோரேனோவுக்கு இன்று 117-வது பிறந்தநாள். பிறந்தநாளை முன்னிட்டு இத்தாலியின் வெர்பானியா பகுதியில் உள்ள அவரது சிறிய அடுக்குமாடி குடியிருப்பில் நண்பர்கள், அண்டை வீட்டார், மருத்துவர்கள் என பலர் ஒன்று கூடினர். வெள்ளை நிற கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.
இவ்வளவு நாள் உடல்நலத்துடன் வாழும் எம்மா, ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளும் சில பிஸ்கட்டுகள் மட்டும் தான் சாப்பிடுகிறார்.
தன்னைப்பற்றி எம்மா கூறுகையில்:- என்னுடைய வாழ்க்கை மிகவும் அற்புதமானது. நான் என்னுடைய 65-வது வயது வரை ஒரு தொழிற்சாலையில் வேலை செய்தேன்.
நான் 26 வயதாக இருந்த போது ஒருவன் என்னை மிரட்டி திருமணம் செய்து கொண்டார். எங்களுக்கு 1937-ம் ஆண்டு ஒரு குழந்தை பிறந்தது. அது பிறந்து 6 மாதங்களுக்குள் இறந்து விட்டது.
பின்னர் என்னுடைய கணவனை நான் அடித்து வெளியே அனுப்பி விட்டேன். இத்தாலியில் அதுவே முதல் சம்பவமாக இருந்தது.
பல ஆண்டுகளாகவே தனியாக வாழ்ந்து வருகிறேன். நான் யாரையும் அழைப்பதில்லை என்றாலும், நிறைய பேர் என்னைப் பார்க்க வருகிறார்கள். அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளிலும் இருந்து கூட நிறைய பேர் என்னைப் பார்க்க வருகிறார்கள். என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
19, 20, 21 ஆகிய மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்துள்ளார். தன் வாழ்நாளில் இரண்டு உலகப் போர்களையும் பார்த்துள்ளார். இத்தாலியில் இதுவரை 90 அரசாங்கங்கள் மாறியுள்ளது.