சர்வதேச மொபைல் சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது குறித்து சில தினங்களுக்கு முன் அறிவித்த எச்எம்டி குளோபல் நிறுவனம் இன்று புதிய நோக்கியா பிராண்டட் போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. நோக்கியா பிராண்டட் போன்களை விற்பனை செய்ய எச்எம்டி குளோபல் நிறுவனம் பத்து ஆண்டுகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
எச்எம்டி குளோபல் அறிவித்திருக்கும் இரு நோக்கியா போன்கள், நோக்கியா 150 மற்றும் நோக்கியா 150 டூயல் சிம் என அழைக்கப்படுகின்றன. இதன் விலை 26 டாலர்கள் அதாவது ரூ.1,754 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன்களின் விற்பனை அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய நோக்கியா 150 மற்றும் நோக்கியா 150 டூயல் சிம் போன்களில் பாலிகார்பனைட் கட்டமைப்பு மற்றும் கீறல் விழாத படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு போன்களிலும் 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளே மற்றும் VGA ரெசல்யூஷன் கொண்ட கேமரா, எல்இடி பிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் 22 மணி நேர டாக்டைம் மற்றும் சிங்கிள் சிம் போனில் 31 நாட்களுக்கும், டூயல் சிம் போனிற்கு 25 நாட்களுக்கும் ஸ்டாண்ட்பை வழங்கும் திறன் கொண்ட 1020 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நோக்கியா போன்களில் யுஎஸ்பி சார்ஜர் மற்றும் எல்இடி டார்ச்லைட் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் நோக்கியா சீரிஸ் 30+ இயங்குதளம் கொண்டிருக்கிறது, மெமரியை கூடுதலாக 32GB வரை நீட்டிகுக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு நோக்கியா 150 போன்களிலும் மைக்ரோ யுஎஸ்பி, 3.5 எம்எம் AV கனெக்டர், ப்ளூடூத் 3.0, எஃப்எம் ரேடியோ மற்றும் எம்பி3 பிளேயர் வழங்கப்பட்டுள்ளது.
நோக்கியா 105, நோக்கியா 216 மற்றும் நோக்கியா 230 உள்ளிட்ட அதிகம் விற்பனையான போன்களுடன் நோக்கியா 150 மற்றும் நோக்கியா 150 டூயல் பீச்சர் போன்களை அறிமுகம் செய்வதன் மூலம் நோக்கியா பீச்சர் போன்களின் விற்பனையை ஊக்குவிக்க இருப்பதாக எச்எம்டி குளோபல் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.