மின்னணு முறையில் பணம் செலுத்துவதை ஊக்குவிக்க மொத்தம் ரூ.340 கோடி பரிசு திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் தலா ரூ.1,000 முதல் ரூ.1 கோடிவரை பரிசு கிடைக்கும்.
ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை தொடர்ந்து, ரொக்கம் இல்லா பண பரிமாற்றத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. அதாவது, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங், மொபைல் செயலி மற்றும் பேடிஎம் போன்ற மின்னணு பண பரிமாற்ற வழிமுறைகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில், மின்னணு முறையில் பணம் செலுத்துவதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் ரொக்க பரிசு அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து திட்ட கமிஷனுக்கு மாற்றாக தொடங்கப்பட்ட ‘நிதி ஆயோக்’ அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
கருப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ச்சியாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு, மின்னணு முறையில் பணம் செலுத்துவது அதிகரித்துள்ளது. ‘ஸ்வைப்பிங்’ எந்திரம் மூலம் பணம் செலுத்துவது 95 சதவீதம் அதிகரித்துள்ளது.
ரூபே கார்டு வழியிலான பரிமாற்றம் 316 சதவீதமும், பேடிஎம் போன்ற வழிகளில் 271 சதவீதமும் அதிகரித்துள்ளது. இருப்பினும், மின்னணு புரட்சிக்கு முழுமையாக மாற இன்னும் வாய்ப்பு இருப்பதாக கருதுகிறோம்.
ஆகவே, இதை ஊக்குவிக்கும் வகையில், பொதுமக்களுக்காக ‘லக்கி கிரஹாக் யோஜனா’, வியாபாரிகளுக்காக ‘டிஜி-தன் வியாபாரி யோஜனா’ என்ற 2 பரிசு திட்டங்களை தொடங்குகிறோம். இது, நாட்டுக்கு மத்திய அரசு அளிக்கும் கிறிஸ்துமஸ் பரிசு.
பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையிலான பரிமாற்றம், பொதுமக்களுக்கும், அரசு அமைப்புகளுக்கும் இடையிலான பரிமாற்றம், ஆதார் அடிப்படையிலான அனைத்து பரிமாற்றங்கள் ஆகியவை இந்த பரிசு திட்டங்களுக்கு தகுதியானவை.
யு.பி.ஐ., யு.எஸ்.எஸ்.டி. எனப்படும் மொபைல் போன் வழியிலான அனைத்து பண பரிமாற்றங்கள், ஆதார் அடிப்படையிலான பணம் செலுத்தும் முறை, ரூபே கார்டு வழியிலான பரிமாற்றம் ஆகியவற்றுக்கு இந்த பரிசுத்தொகை பொருந்தும். ஆனால், தனியார் கிரெடிட் கார்டுகள், தனியார் நிறுவனங்களின் இ-வாலட் எனப்படும் மின்னணு பணப்பை முறையிலான பரிமாற்றங்களுக்கு இந்த பரிசுத்தொகை கிடையாது.
தேசிய பண பட்டுவாடா கழகம், இந்த திட்டத்தை அமல்படுத்தும் நிறுவனமாக செயல்படும்.
சிறிய அளவிலான பண பரிமாற்றத்தை ஊக்குவிப்பதே எங்கள் நோக்கம் என்பதால், ரூ.50 முதல் ரூ.3 ஆயிரம் வரையிலான தொகைக்கு நடைபெறும் பண பரிமாற்றம் மட்டும் பரிசுக்கு பரிசீலிக்கப்படும்.
பொதுமக்களுக்கான ‘லக்கி கிரஹாக் யோஜனா’ திட்டப்படி, வருகிற 25-ந் திகதியில் இருந்து அடுத்த 100 நாட்களுக்கு நாள்தோறும் 15 ஆயிரம் பேருக்கு தலா ரூ.1,000 வீதம் பரிசு வழங்கப்படும். அதுபோல், வாரந்தோறும், 7 ஆயிரம் பொதுமக்களுக்கும், 7 ஆயிரம் வியாபாரிகளுக்கும் வாராந்திர பரிசு வழங்கப்படும்.
பொதுமக்களுக்கு ரூ.1 லட்சம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் என்ற வகையிலும், வியாபாரிகளுக்கு ரூ.50 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.2,500 என்ற வகையிலும் வாராந்திர பரிசுத்தொகை வழங்கப்படும். அடுத்த ஆண்டு ஏப்ரல் 14-ந் திகதிவரை இந்த வாராந்திர பரிசு வழங்கப்படும்.
இதுதவிர, மெகா பரிசுகளும் உண்டு. அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, ஏப்ரல் 14-ந் திகதி அதற்கான குலுக்கல் நடைபெறும். கடந்த நவம்பர் 8-ந் திகதியில் இருந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் 13-ந் திகதிவரை மின்னணு முறையில் பண பரிமாற்றம் செய்தவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பொதுமக்களுக்கு ரூ.1 கோடி, ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம் என்ற வகையிலும், வியாபாரிகளுக்கு ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.12 லட்சம் என்ற வகையிலும் மெகா பரிசுகள் வழங்கப்படும். பரிசுக்கு உரியவர்களை தேசிய பண பட்டுவாடா கழகம் அறிவிக்கும்.
இந்த இரு திட்டங்களுக்கும் மொத்தம் ரூ.340 கோடி செலவாகும். இவ்வாறு அவர் கூறினார்.