பெர்லின் கிறிஸ்துமஸ் சந்தை தாக்குதலில் முக்கிய சந்தேக நபராக கருதப்படும் 24 வயதுடைய துனீசிய நபர், தேடப்படுபவர் என கூறும் சுவரொட்டியானது ஐரோப்பா முழுவதும் பரவியுள்ளது.
அனிஸ் அம்ரி ஏற்கனவே பாதுகாப்பு படைகளுக்கு தெரிந்தவர். மேலும், இஸ்லாமியவாத அழைப்பு தொடர்புகளால் அவர் ஓர் அச்சுறுத்தலாக கருதப்படுகிறார்.
ஜெர்மனியில் அவருடைய தஞ்ச கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது. ஆனால், தாற்காலிகமாக தங்குவதற்கு அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
கிறிஸ்துமஸ் சந்தைக்குள் லாரியை ஓட்டி 12 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில், அந்த லாரிக்குள் அவருடைய அடையாள அட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அனிஸ் அம்ரி ஆயுதம் வைத்திருக்கலாம் என்றும், ஆபத்தானவர் என்றும் ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரை கைது செய்ய வழிவகுக்கும் எந்தவொரு தகவல்களுக்கும் ஒரு லட்சம் டாலர் தொகையை சன்மானமாக அறிவித்துள்ளனர்.