ராஜா, சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருக்கும் இவர்கள் நான்கு பேரும் பெரிய பணக்காரர்கள் என்பதால் தினமும் குடியும், கும்மாளமுமாக இருக்கிறார்கள். அதேநேரத்தில் அந்த குடியிருப்பில் தங்கியிருக்கும் பெண்களை கேலி, கிண்டல் செய்வதையும் வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள்.
இந்நிலையில், அதே குடியிருப்பில் வசிக்கும் நாயகி ஊர்மிளா காயத்ரியை இவர்கள் கிண்டல் செய்ய, அவள் நண்பர்களில் ஒருவரை அடித்து விடுகிறாள். இதனால், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஊர்மிளாவை பழிவாங்க துடிக்கிறார்கள். அன்றிலிருந்து நண்பர்களில் ஒருவன் திடீரென கொல்லப்படுகிறார். அந்த கொலையை செய்தது ஒரு பூனை என்று அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் அனைவரும் நம்புகிறார்கள்.
ஆனால், கொல்லப்பட்டவனின் நண்பர்களோ இதற்கு ஊர்மிளாதான் காரணம் என்று அவள்மீது பழியை போடுகிறார்கள். இந்த கொலை விசாரணை போலீஸ் வசம் செல்ல, அடுத்ததாக மற்றொரு நண்பரும் கொல்லப்படுகிறார். இவரும் பூனையால் கொல்லப்பட்டதாக கூற, போலீஸ் குழம்புகிறது.
இறுதியில், நண்பர்கள் பூனையால்தான் கொல்லப்பட்டார்களா? பூனை உருவத்தில் மிரட்டும் அந்த நபர் யார்? மற்ற நண்பர்கள் அந்த பூனையிடம் இருந்து தப்பித்தார்களா? என்பதே மீதிக்கதை.
படத்தின் நாயகர்களான ராஜா, சஞ்சய் மிக்கி, ஹேடன், குமார் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். நடிப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாமோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இருப்பினும், வசதியான இளைஞர்கள் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார்கள்.
மாடல் அழகியாக நடித்திருக்கும் நாயகி ஊர்மிளா காயத்ரி, துணிச்சலான பெண்ணாகவும், தன் மேல் விழுந்த பழியை துடைக்க போராடும் கதாபாத்திரத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். பிற்பாதியில் வரும் ஷைய்னி கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார்.
ஷெல்பி என்னும் கதாபாத்திரத்தில் பூனை நடித்திருக்கிறது. பூனையை வைத்து சிறப்பாக கையாண்டிருக்கிறார்கள் என்றே சொல்லலாம். குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் யுவினாவும் தன் பங்குக்கு சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறாள். வாட்ஸ் அப் மணி கதாபாத்திரத்தில் வரும் டேனியலின் காமெடி படத்தில் எடுபடவில்லை.
பேய் பழி வாங்கும் வழக்கமான கதையையே படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சின்னாஸ் பழனிச்சாமி. எல்லா பேய் படங்களிலும் வரும் வழக்கமான கதை, வழக்கமான காட்சிகள் என கொடுத்திருந்தாலும், புது முயற்சியாக பூனை பழி வாங்குவதாக அமைத்திருப்பது படத்திற்கு புதுமையாக இருக்கிறது. கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு கொஞ்சம் கைகொடுத்திருக்கிறது.
ஸ்ரீஜித் எடவனா இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையில் கொஞ்சம் கவனம் தேவை. போஜன் கே.தினேஷின் ஒளிப்பதிவு ஓரளவுக்கு ரசிக்கும்படி உள்ளது.
மொத்தத்தில் ‘மியாவ்’ சத்தம் போதவில்லை.