பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளும் அவகாசம் முடிவடைந்ததால், அந்த நோட்டுகளை இனிமேல் ரிசர்வ் வங்கிகளில் மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. அதன்படி மக்கள் தற்போது ரிசர்வ் வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்றி வருகின்றனர்.
டெல்லி பாராளுமன்றம் அருகே அமைந்துள்ள ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்துக்கு ஏழை பெண் ஒருவர் நேற்று தனது குழந்தையுடன் வந்தார். தான் வைத்திருந்த பழைய நோட்டுகளை மாற்றி தருமாறு அங்கிருந்த காவலர்களிடம் அவர் கேட்டுக்கொண்டார். இதை ஏற்காத அவர்கள், அந்த பெண்ணை விரட்டினர்.
இதனால் விரக்தியுடனும், கண்ணீருடனும் வாசலுக்கு வந்த அந்த பெண் திடீரென தனது மேலாடையை கழற்றிவிட்டு அங்கேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். குழந்தையுடன் பெண் ஒருவர் அரை நிர்வாணமாக இருப்பதை கண்ட பாதசாரிகளும், வங்கி அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து அங்குள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த போலீசார், அந்த பெண்ணையும், குழந்தையையும் வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.