அசிஸ்டெண்ட் போலீஸ் கமிஷனராக இருக்கும் ஹீரோ ராம்சரண் எங்கு அநியாயம் நடந்தாலும் உடனே தட்டிக் கேட்கிறார். இதன் காரணமாக 21 முறை வெவ்வேறு ஊர்களுக்கு ராம்சரண் டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார். எனினும் டிரான்ஸ்பருக்கு அஞ்சாத ராம்சரண் போராட்டம் நடத்தி போக்குவரத்தைக் தொந்தரவு செய்ததாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வை அடித்து விடுகிறார். இதனால் 22-வது முறையாக மும்பைக்கு ராம்சரண் டிரான்ஸ்பர் செய்யப்படுகிறார்.
இதற்கிடையில் தந்து தோழியின் திருமணத்திற்காக நியூயார்க்கிலிருந்து ஹீரோயின் பிரியங்கா சோப்ரா மும்பை வருகிறார். திருமணம் முடிந்து தான் தங்கியிருக்கும் அறைக்கு பிரியங்கா சோப்ரா திரும்பும்போது வழியில் ஒரு பெட்ரோல் பங்கில் இறங்குகிறார்.
அங்கு ஒரு கும்பல் பெட்ரோலில் கலப்படம் செய்கிறது. இதனை அந்த வழியாக செல்லும் துணை கலெக்டர் தட்டிக்கேட்க அவரை அந்தக் கும்பல் உயிருடன் எரித்து விடுகிறது. இதனைப் பார்க்கும் பிரியங்கா சோப்ரா போலீசுக்கு போன் செய்து இந்த கொலை நடந்ததாக தெரிவிக்கிறார்.
இந்த வழக்கு ராம்சரண் கைக்கு வருகிறது. இதுகுறித்து விசாரணை செய்யும் ராம்சரண் கொலை தொடர்பாக பிரியங்கா சோப்ராவை சந்தித்து விளக்கம் கேட்கிறார். ஆரம்பத்தில் ராம்சரண் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கும் பிரியங்கா சோப்ரா, ராம்சரணின் அறிவுரையால் மனம் மாறி தனக்குத் தெரிந்த விவரங்களை ராம்சரணிடம் தெரிவிக்கிறார்.
இதற்கிடையில் போலீசில் உண்மையை சொன்னதற்காக பிரியங்கா சோப்ராவை அந்த கும்பல் தொந்தரவு செய்கிறது. இதனால் ராம்சரண், பிரியங்கா சோப்ராவை தனது வீட்டிற்கு அழைத்து வந்து தங்க வைத்துக்கொள்கிறார். பின்னர், பிரியங்கா சோப்ரா-ராம்சரண் இருவரும் காதலிக்க ஆரம்பிக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் இது ஒரு சாதாரண வழக்கு இல்லை, ஆயில் மாபியா என்ற மிகப்பெரிய நெட்வொர்க் கும்பல் இந்த வழக்குக்குப் பின்னால் இருக்கிறது என்ற உண்மை ராம்சரணுக்குத் தெரிய வருகிறது. இதனால் ஆயில் மாபியா நெட்வொர்க் குறித்த விவரங்களை ராம்சரண் சேகரிக்க ஆரம்பிக்கிறார்.
இறுதியில் அந்த ஆயில் மாபியா கும்பலை ராம்சரண் ஒழித்தாரா? பிரியங்கா சோப்ரா-ராம்சரண் இடையிலான காதல் என்னவானது? என்பதே படத்தின் மீதிக்கதை.
கதாநாயகன் ராம்சரண் தனது பாணியில் நடிப்பு, நடனம், ஆக்ஷன் என எதிலும் குறைவைக்கவில்லை. ஏசிபி வேடத்திற்கு ராம்சரண் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். கதாநாயகி பிரியங்கா சோப்ரா தனது வழக்கமான நாயகி ரோலை நிறைவாக செய்திருக்கிறார்.
இயக்குனர் அபூர்வா லாகியா ஒரு ஆக்ஷன் படத்தை விறுவிறுப்பாகக் கொடுத்திருக்கிறார். ஆர்.ஜே.குருராஜின் ஒளிப்பதிவில் பாடல்கள், காட்சிகள் அனைத்தும் கலர்புல் ரகம். வழக்கம்போல இல்லாமல் அமர் முஹில், ஆனந்த் ராய் ஆனந்த், சிரந்தன் பத், மீட் புரோஸ் அஞ்சன் என இப்படத்துக்கு நான்கு இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளனர்.
காட்சிகள், திரைக்கதை ஆகியவற்றில் ஒருசில குறைகள் இருந்தாலும் ராம்சரணின் ஆக்ஷன் காட்சிகளுக்காக இப்படத்தை ஒருமுறை பார்க்கலாம்.
மொத்தத்தில் ‘சூப்பர் போலீஸ்’ ஆக்ஷன் மசாலா.