சிறு நகரமொன்றில் கதாநாயகன் குரு அரவிந்த் வாழைத்தார் கடை வைத்து நடத்தி வருகிறார். குரு அரவிந்துக்கு அப்பா கிடையாது அம்மா மட்டும் தான். தானுண்டு தனது வேலையுண்டு என அமைதியாக இருக்கும் குரு அரவிந்த் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்.
குரு அரவிந்தின் மாமன் மகள் சாமந்தி (கதாநாயகி) அதே ஊரில் பிளஸ் ஒன் படித்து வருகிறார். சாமந்திக்கு குரு அரவிந்த் மீது காதல். அவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால் நாயகன் குரு அரவிந்த் நாயகியைக் கண்டுகொள்ளாமல் சதாசர்வகாலமும் குடித்துக் கொண்டே இருக்கிறார்.
அந்த ஊரின் கவுன்சிலர் தனது நான்கு தம்பிகளுடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சொத்து அபகரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சிறு வயதில் குரு அரவிந்தின் தந்தையிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் கவுன்சிலர் அவரது தந்தையைக் கொன்று விடுகிறார். இதனை நேரில் பார்க்கும் குரு அரவிந்த் இதன் காரணமாக மிகுந்த அமைதியுடன் தனது வேலைகளைப் பார்த்து வருகிறார்.
ஒருகட்டத்தில் குரு அரவிந்த்தின் அம்மா குடியை விட்டுவிடும்படி மகனிடம் கெஞ்சுகிறார். அம்மாவின் வார்த்தைகள் குரு அரவிந்தின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் குடியை விட்டு விடுகிறார்.
மேலும், சாமந்தியிடமும் நன்றாகப் பேசி பழகுகிறார். இருவரது வீட்டிலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சாமந்தியின் பெற்றோர் இடத்தை கவுன்சிலர் தனது தம்பிகளுடன் சேர்ந்து அபகரிக்கப் பார்க்கிறார். இதனால் குரு அரவிந்துக்கும், கவுன்சிலருக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது.
இந்த மோதலில் கவுன்சிலர் மற்றும் அவரது தம்பிகளை எதிர்த்து குரு அரவிந்த் வெற்றி பெற்றாரா? சாமந்தியைக் கரம் பிடித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் குரு அரவிந்த் நன்றாக நடித்திருக்கிறார். நடனம், ஆக்ஷன் காட்சிகளிலும் நன்றாக செய்திருக்கிறார். துடுக்குத்தனம் நிறைந்த பெண்ணாக நடித்திருக்கும் நாயகி சாமந்தி தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். நாயகன் குரு அரவிந்த்தின் உறவினராக படம் முழுவதும் வரும் துணை நடிகர் ஜெயமணி படத்தில் காமெடி நடிகர் இல்லாத குறையைப் போக்கி படத்தின் கலகலப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறார்.
சக்தியின் இசையில் படத்தின் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. குடி தொடர்பாக இளைஞர்களின் வாழ்வு சீரழிவதை இயக்குனர் ஸ்ரீநிவாஸ் நன்றாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால் பெரும்பாலான காட்சிகளில் அழுத்தம் இல்லை. இதனால் படத்தில் ஆங்காங்கே தொய்வு ஏற்படுகிறது.
மொத்தத்தில் ‘சூரத்தேங்காய்’ பலம் குறைவு.