இந்தியாவில் யூ ட்யூப் சேனலில் நிகழ்ச்சிகளை வழங்கும் சுமித் வர்மா என்பவர், சாலையில் நடந்து செல்லும் பெண்களுக்கு அருகில் சென்று முத்தமிட்டு பின்பு ஓடி விடுவது போன்ற வீடியோவை பதிவிட்டதற்கு பலத்த கண்டனங்களுக்கு ஆளாகியுள்ளார்.
டெல்லி போலிஸார் தற்போது அந்த வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்; மேலும் அதில் “பாதிக்கப்பட்டவர்கள்” புகார் அளிக்க வேண்டும் என போலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
பல எதிர்ப்புகளுக்கு பிறகு மன்னிப்பு கேட்டு, அந்த “குறும்பு வீடியோவை” அவர் அழித்துவிட்டார்
புத்தாண்டு நிகழ்ச்சியில் பெங்களூருவில் பெண்கள் கூட்டாக பாலியல் தாக்குதலுக்கு ஆளானதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்த மக்கள் மத்தியில் பெரும் கோபம் எழுந்துள்ள நிலையிலும் சுமித் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
“கிரேஸி சப்மிட்” என்னும் அவரின் யூ டியூப் சேனலை 150,000 பேருக்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர்; அந்த வீடியோவை பொழுதுபோக்கிற்காக மட்டுமே கருதி பதிவிட்டதாகவும், யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் பதிவிடவில்லை என்றும் சுமித் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவரின் அந்த விளக்கத்தை போலிஸார் ஏற்றுக் கொள்ளவில்லை.
“அந்த வீடியோ ஊடகத்தின் மூலமாக டெல்லி போலிஸாரின் கவனத்திற்கு வந்தது. நாங்கள் ஆரம்பகட்ட தொழில்நுட்ப விசாரணையை தொடங்கியுள்ளோம். அந்த ஆபாச வீடியோ முகநூல் மற்றும் யூ டியூப்பில் உள்ளது. நாங்கள் அது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்” என காவல்துறை செய்தி தொடர்பாளர் திபெந்திரா பதாக் பிடிஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார்.
“சமூக ஊடகங்களில் இம்மாதிரியான பாலியல் ரீதியான வீடியோக்கள், லைக்ஸ் வாங்குவதற்கும் இணையத்தில் பிரபலம் ஆவதற்கும் மேலும் சிலர் பணத்திற்காகவும் பதிவிடப்படுகிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.
அவரின் இந்த வீடியோ “முதிர்ச்சியற்றதாகவும் மேலும் மோசமாகவும்” உள்ளது என சமூக ஊடகங்களிலும் பலர் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இந்தியாவில் பல யூ டியூப் சேனல்களும் அதில் பல பொழுது போக்கு நிகழ்ச்சிகளை வழங்குபவர்களும் உள்ளனர்
அம்மாதிரியான ஒரு யூ டியூப் சேனல், “டிரபிள் சீக்கர் டீம்” பெண்களையோ அல்லது யாரையோ தாக்குதவது போல் உள்ளதை ஒரு போதும் பொழுதுபோக்காக எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளது.
அது பெண்களை தாக்குவதாகவே எடுத்துக் கொள்ளப்படும் என்று அந்த சேனல் தெரிவித்துள்ளது.