தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்பதற்கு நடைமுறை சட்டச்சிக்கல்கள் இருப்பாக மோடி கூறியிருக்கிறார் என்று அவரை சந்தித்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மத்திய அரசு , ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதிக்கும் வண்ணம் ஒரு அவசர சட்டம் பிறப்பிக்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்த பன்னீர்செல்வம் இன்று டில்லி வந்து பிரதமர் மோதியை சந்தித்தார்.
அவருடன் தலைமைச் செயலர் கி்ரிஜா வைத்தியநாதனும் சென்றிருந்தார்.
மோதியை சந்தித்த பின்னர் தமிழ் நாடு இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பன்னீர்செல்வம், உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு குறித்த வழக்கை விசாரித்து முடித்து தீர்ப்பு வெளியிடவுள்ள நிலையில், இது குறித்து அவசர சட்டம் பிரகடனப்படுத்துவதில் உள்ள சிக்கல்களை தன்னிடம் மோதி கூறினார் என்றார்.
இந்த விஷயத்தில் தமிழகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கும் என்றும் தன்னிடம் மோதி கூறியதாக பன்னீர்செல்வம் கூறினார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பன்னீர்செல்வம், விரைவில் நல்லது நடக்கும் என்று பிரதமர் கூறினார். அதை அனைவரும் நம்புவோம். பொறுமை காக்கவேண்டும் என்று கூறினார்.
இந்த சந்திப்பு குறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்ட பிரதமர் மோதி, ஜல்லிக்கட்டு மீது உச்சநீதி மன்றம் விதித்த தடை முதல்வருடன் நடத்திய விவாதத்தில் இடம்பெற்றதாகவும், ஜல்லிக்கட்டின் கலாசார முக்கியத்துவத்ததை தாம் உணர்ந்திருக்கும் அதே நேரத்தில், இந்தப் பிரச்சனை தற்போது நீ்திமன்ற வழக்கில் இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
இது குறித்து தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு துணை நிற்கும் என்றும் அவர் கூறினார்.
ஜல்லிக்கட்டு தவிர, தமிழகத்தில் நிலவும் வறட்சி நிலை குறித்தும் பிரதமரிடம் பன்னீர்செல்வம் விவரித்தார்.
வறட்சி நிவாரணம் குறித்து முடிவு செய்ய விரைவில் மத்திய குழு ஒன்று தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், வறட்சி நிலையை சமாளிக்க அனைத்து சாத்தியமான உதவிகளும் தரப்படும் என்றும் மோதி கூறியதாக பன்னீர்செல்வம் தெரிவித்தார்.