பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பாராலிம்பிக் நீச்சல் வீரர் பினோத் சிங். இவரது தந்தை கடந்த 6-ந்தேதி சச்சிவாலயா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதில் ‘‘சிலபேர் எனது மகனை கடத்திச் சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுகிறேன். அவனுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையே காதல் விவகாரம் இருந்தது.
என்னுடைய மகன் ஒரு விளையாட்டு வீரர். அந்த பெண்ணும் விளையாட்டு வீராங்கனைதான். அந்த பெண்ணின் குடும்பத்தினர் காதலுக்கு எதிராக இருந்தனர். அவர்கள் எனது மகனை குறிவைத்துள்ளனர்’’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் பேரின் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பாகல்பூர் மாவட்டம் லசோ என்ற கிராமத்தில் உள்ள பழத்தோட்டத்தில் ஒரு பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் போலீசார் அந்த பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
அப்போது பிணமாக கிடந்தது பினோத் சிங் எனத் தெரியவந்தது. கழுத்து நெரிக்கப்பட்டதற்கான தடயங்கள் தென்பட்டன. எனவே, அவர் கடந்த நான்கைந்து நாட்களுக்கு முன்பே கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் போலீசார், பிணத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகிறார்கள்.