இணைதளங்களை முடக்கும் ஹாக்கிங் குழுக்கள் தொடர்ந்து அரசு இணையதளங்களையும் முடக்கி வருகின்றனர். இதில், கடந்த 2013-2016 வரையிலான காலகட்டத்தில் மட்டும் பல்வேறு ஹாக்கிங் குழுக்களால் இந்திய அரசின் 700-க்கும் மேற்பட்ட இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டில் மட்டும் மத்திய, மாநில அரசுகளின் 199 இணையதளங்கள் முடக்கப்பட்டது. முன்னதாக 2015-ல் 164 இணையதளங்களும், 2014-ல் 155 இணையதளங்களும், 2013-ல் 189 இணையதளங்களும் முடக்கப்பட்டதாக மத்திய அரசின் செர்ட்-இன் அமைப்பு தெரிவித்துள்ளதாக மாநிலத்திற்கான மத்திய அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் அகிர் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக விளக்கினார்.
இந்த காலகட்டத்தில் இணைய குற்றங்களுக்காக பல்வேறு வழக்குகளின் கீழ் 8,348 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 2014-15 காலகட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 315 பேருக்கு மட்டுமே தண்டனை வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், அரசின் பொதுத்துறை இணையதளங்களை முடக்க ஹேக்கர்கள் முயற்சி செய்ததாகவும், பொதுத்துறை இணையதளங்களின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
அரசு இணையதளங்களில் பொதுமக்களுக்கு தேவையான தகவல் மட்டுமே இருக்குமென்றும், மற்றபடி அரசின் முக்கிய தகவல்கள் இணையத்திலிருந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.