தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அரங்கேறிய அரசியல் அதிரடிக் காட்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கின்றன. முக்கிய நிகழ்வுகளின் 10 தகவல்கள்:
1. பிப்ரவரி 7 : இரவு 9 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் திடீரென தியானம் செய்யத் துவங்கினார் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
40 நிமிடங்களுக்குப் பிறகு மெளனம் கலைத்து, அடுக்கடுக்காக, அதிமுக பொதுச் செயலர் சசிகலா மீது குற்றச்சாட்டு, கட்டாயப்படுத்தி பதவியை ராஜிநாமா செய்ய வைத்ததாகப் புகார்.
2. நள்ளிரவு: போயஸ் கார்டனில் தொண்டர்கள் மற்றும் செய்தியாளர்களைச் சந்தித்தார் சசிகலா. திமுகவுடன் சேர்ந்து பன்னீர் செல்வம் சதி செய்வதாகப் புகார்.
3. அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து பன்னீர் செல்வம் நீக்கம். கட்சியிலிருந்தும் நீக்கப்படுவார் என்றார் சசிகலா.
4. பிப்ரவரி 8, அதிகாலை: சசிகலாவின் குற்றச்சாட்டுக்களுக்கு பன்னீர் செல்வம் பதிலடி. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கப் போவதாக அறிவிப்பு. ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து, உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என அறிவிப்பு.
5. பன்னீர் செல்வத்துக்கு, ஒரு எம்.பி மற்றும் நான்கு எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் ஆதரவு.
6. அதிமுகவில் நடக்கும் கேலிக் கூத்துக்களுக்கும் திமுகவுக்கும் தொடர்பில்லை, எங்களை சீண்ட வேண்டாம். சசிகலாவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பதிலடி.
7. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம். சசிகலா உரை. எதிர்க்கட்சியினரின் சலசலப்பைக் கண்டு அஞ்ச மாட்டேன் என்று அறிவிப்பு.
8. சசிகலா பக்கம் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னுடன் தொடர்பில் உள்ளனர் என்றார் ஓ.பன்னீர் செல்வம்.
9. ஆளுநர் வியாழக்கிழமை பிற்பகல் சென்னை திரும்புவதாக அறிவிப்பு
10. குடியரசுத் தலைவரைச் சந்திக்க டெல்லி செல்ல விமான நிலையம் வரை சென்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள், ஆளுநர் வருகை பற்றி அறிந்ததால், திரும்பி வந்தனர்.