மணமகனின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என்று வரவழைக்கப்பட்டிருந்த 200 விருந்தினர்கள் பணம் கொடுத்து வரவழைக்கப்பட்ட நடிகர்கள் என்பதை மணமகளின் குடும்பத்தினர் அறிய வந்ததை அடுத்து, சீனாவின் வட பகுதியை சேர்ந்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மணமகனின் சார்பாக வந்திருந்தோரிடம் உரையாடியபோது, அவர்கள் மணமகனுக்கு “நண்பர்கள் மட்டுமே” என்று சொன்னவர்கள், எவ்வாறு அவரை அறியவந்தனர் என்று தெளிவாக்கவில்லை. எனவே, லியு என்ற குடும்பப் பெயருடைய அந்த மணமகள் சந்தேகமடைந்தாக ஷான்ஸி மாநில உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மணமகனின் பெற்றோர் யாருமே இல்லாமல் திருமணச் சடங்கு தொடங்கியபோது, இந்த ஏமாற்று நாடகம் வெளியாகிவிட்டது.
பிராந்தியத் தொலைக்காட்சி நிலையமான, ஷான்ஸி தொலைக்காட்சியின் “விருந்தினர்” பகுதியில் பேட்டியளித்தோர், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களாக ஒரு நாள் நடிக்க 80 யுவான் (12 டாலர்) மணமகன் வாங் என்பவரால் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
தங்களை வாடகைக் கார் ஓட்டுபவர்கள் மற்றும் மாணவர்கள் என்று சிலர் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், ‘விசேட்’ என்கிற சமூக ஊடகம் வழியாக மணமகனோடு உரையாடி, விருந்தினராக நடிப்பதற்கான கட்டணத்தை பேரம்பேசியதாக ஒருவர் கூறியுள்ளார்.
மணமகளை பொறுத்தவரை, இருவரும் 3 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்தாலும், இருவருக்கும் வெவ்வேறு நட்பு வளையங்கள் இருந்ததால், தி்ருமணத்துக்கு வந்தவர்களைப் பற்றி அவருக்கு சந்தேகம் ஏதும் ஏற்படவில்லையாம்.
மணமகன் இப்படியொரு நாடகம் நடத்தி இருப்பதற்கு பின்னணியில் என்ன உள்ளது என்றோ, இதில் எந்த விதிமுறைக்கு எதிராக அவர் நடந்துள்ளார் என்றோ தெரியவில்லை.
அவர் மிகவும் ஏழை என்பதால் மனைவியின் குடும்பம் திருமணத்திற்கு ஒப்பு கொள்ளவில்லை. எனவே, அவர்களை தர்மசங்கடத்திற்கு ஆளாக்க வேண்டாம் என்று எண்ணி தன்னுடைய குடும்பதினர் இதில் கலந்து கொள்வதை மணமகன் தடுத்துவிட்டார் என்று சில ஊடகங்கள் கூறுகின்றன.
காவல்துறையினர் இதுபற்றி விசாரணை ஒன்றை தொடங்கியுள்ளதாக பிராந்திய அரசு செய்தி நிறுவனமான ‘ஷிபு ஆன்லைன்’ தெரிவிக்கிறது.
இந்த திருமணத்திற்கு பின்னால் இருந்த சூழ்நிலைகள் பற்றி அறிவதில் சீன சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் ஆவல் கொண்டு கருத்துக்கள் வெளியிட்டுள்ளனர்.
“மிகவும் ஏழையாக இருந்துகொண்டு, 200 விருந்தினருக்கு அவரால் எப்படி பணம் கொடுத்திருக்க முடியும்?” என்று ‘சீனா வைபோ’ சமூக ஊடக பயன்பாட்டாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தன்னுடைய குடும்பத்தினரையும், நண்பர்களையும் அழைக்காமல் இருக்குமளவுக்கு அவரை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிய வேறு சில சூழ்நிலை இருந்திருந்திருக்கலாம் என்று பிறர் ஊகம் செய்துள்ளனர்.