நாம் தினந்தோறும் காலை எழுந்தவுடன், இரவு தூங்கும் வரை பேஸ்ட், காபி, ஃபேன், ஏசி என பல முன்னணி நிறுவனங்களின் பொருட்களை பயன்படுத்தி வருகின்றோம். ஆரம்பத்தில் கோல்கேட், பெப்சோடென்ட், க்ளோஸ்அப் என மாறி மாறி பயன்படுத்தி வந்தாலும், ஒரு சமயம் நம் மனதுக்கு எந்த பொருள் பிடித்துப்போகிறோதோ, அந்தப் பொருளைத்தான் தொடர்ந்து வாங்கிப் பயன்படுத்தி வருகிறோம். இப்படி ஒரு நிறுவனத்தின் பொருளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் அந்நிறுவனத்தின் லாபமானது அதிகரித்துக்கொண்டே இருக்கும். அதைப்போல, பங்குச் சந்தையில் அந்நிறுவனம் பட்டியலிட்டு இருந்தால், நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பதைப்போல, அந்நிறுவனத்தில் ஒருவர் முதலீடு செய்து இருந்தால் பங்கை வாங்கி வைத்திருப்பவரும் பணக்காரர் ஆகி இருப்பார் என்பது நம்மில் பலருக்குத் தெரிவதில்லை.
ஆடிக்கு ஒரு முறை அமாவாசைக்கு ஒரு முறை என எப்போதாவது பயன்படுத்தும் பொருளாக இருந்தால்கூட நமக்கு பிடித்தமான, நம்பிக்கையான ஒரு பொருளையை விரும்பி வாங்குகின்றோம். உதாரணத்துக்கு கோல்கேட் டூத்பேஸ்ட், ப்ளூ ஸ்டார் ஏசி. ஆனால், என்னதான் பேஸ்ட், காபி, ஃபேன், ஏசி என பொருள்களை வாங்கினாலும், அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி வைத்திருக்கிறோமோ என்றால், 100க்கு 99.99 சதவிகிதம் பேர் இல்லை என்ற பதிலை சொல்ல வேண்டியது வரும். ஒரு வேளை தினசரி பயன்படுத்தும் நல்ல நிறுவனப் பங்கினை வாங்கி வைத்து இருந்தால் அவை இன்று அதிக வருமானத்தை வழங்கி இருக்கும்.
உதாரணத்துக்கு… பேஸ்ட் – கோல்கேட், காபி – டாடா காபி, ஃபேன் – கிராம்டன், ஏசி – ப்ளூ ஸ்டார் என பல நிறுவனங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம். கிராம்டன் நிறுவனப் பங்கின் விலை 2000-ம் ஆண்டில் வெறும் 2 ரூபாய். 2000-ல் 10,000 ரூபாய்க்கு 5,000 ஆயிரம் பங்குகளை வாங்கி இருந்தால், இன்றைய தேதிப்படி இந்த பங்கின் மதிப்பு 11 லட்சத்து 17 ஆயிரம். இந்தளவு வருமானம் வேறு எங்குமே நிச்சயம் கிடைக்காது. கீழே நாம் அன்றாடம் பயன்படுத்தும் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பெயரும், அவற்றின் 2000 மற்றும் 2017-ம் ஆண்டின் பங்கு விலையும் குறிப்பிடப்பட்டுள்ளது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனங்களில் 2000-ம் ஆண்டில் ஒரு நிறுவனப் பங்கின் முதலீட்டை மேற்கொண்டு இருந்தால், அவை இன்று எவ்வளவு சதவிகிதம் வருமானம் கிடைத்து இருக்கும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்டுள்ளதைப்போல, தினமும் பல முன்னணி நிறுவனங்களின் பொருள்களைத் தெரிந்தும், தெரியாமலும் பயன்படுத்தி வருகிறோம். இந்தப் பொருள்களை தினசரி பயன்படுத்தி வந்தாலும், அந்த பொருளை வாங்கும்போது அது நல்ல நிறுவனமா, தரமான பொருளா என அலசி ஆராய்ந்துதான் வாங்குகின்றோம். ஆனால், அதே நம்பிக்கையில் அந்த நிறுவனத்தின் பங்குகளில் யாரும் முதலீடு செய்வதில்லை, முதலீடு மேற்கொள்ளவும் தயாராக இருப்பதில்லை. இனிமேலாவது `நல்ல நிறுவனப் பங்குகளைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பங்குகளில் நீண்ட காலம் முதலீடு மேற்கொள்ளும்’ முறையைப் பின்பற்றினால் வருமானம் ஈட்டலாம்.
இது எல்லாம் சும்மா… பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க முடியாது என்று சொல்பவருக்கு உதாரணம்தான் சென்னையைச் சேர்ந்த டோலி கன்னா என்ற பெண்மணி. பொதுவாக இவர் வாங்கிய பங்குகளை நீண்ட காலத்துக்கு வைத்துக் கொள்ளும் பழக்கமுடையவர். இவரது பங்கு கண்டுபிடிக்கும் வழக்கம் என்பது கொஞ்சம் எளிதானது. நமது தினசரி வாழ்க்கையில் புதிதாக வந்து நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை கண்டுபிடித்து முதலீடு செய்வார். அதன் பிறகு நிறுவனத்தின் நிலையை அறிந்து முதலீட்டைத் தொடர்வார். குறைந்தபட்சத்தில் முதலீட்டைத் தொடர்ந்து இன்று கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருவதோடு, பல நிறுவனங்களில் கோடிக்கணக்கில் பங்குகளையும் வாங்கி வருகிறார்.