பாகுபலி-2 படம் இணைய தளத்தில் வெளியானதையடுத்து விஷால் பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
‘பாகுபலி-2’ படம் கடந்த ஏப்ரல் 28-ந் திகதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியானது.
வெளியான முதல் நாளிலேயே இந்தப் படம் ‘தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இணையதளத்திலும் வெளியானது.
இதுகுறித்து, நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் சென்னை பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் முறைப்பாட்டு மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் கூறி இருப்பதாவது:- சமீபத்தில் வெளியான ‘பாகுபலி-2’ திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
இதேபோல் புது படங்கள் அனைத்தும் அந்த இணையத் தளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்படுகிறது.
இதனால் தயாரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே தமிழ் ராக்கர்ஸ் இணைய தளத்தை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், ‘பாகுபலி-2’ படம் இணையதளத்தில் வெளியான பிறகும் கூட இதுவரையில் இந்திய சினிமாவில் எந்தவொரு சினிமாவும் செய்யாத வசூல் சாதனையை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.