நடிகர் சங்க பொதுச் செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் நேற்று போலீஸ் கமிஷனர் கரன் சின்காவை சந்தித்து மனு கொடுத்தார்.
அதில், ‘பாகுபலி-2’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியானது. இதுபோன்று புதிய படங்கள் இணையதளத்தில் வெளியாவதை தடுக்க வேண்டும்.
‘பாகுபலி-2’ படத்தின் திருட்டு விசிடிகள் மற்றும் புதிய படங்களின் திருட்டு விசிடிக்கள் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் விற்கப்படுகின்றன. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து சென்னையில், திருட்டு விசிடி விற்பவர்களை பிடிக்க 11 படைகள் அமைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து சென்னையில் பர்மாபஜார், நேதாஜிபஜார், அமைந்தகரை, சத்யா பஜார், ரத்தன் பஜார் உள்பட பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதில் ‘பாகுபலி-2’ ‘கவண்’, ‘டோரா’ உள்பட பல புதிய பட திருட்டு விசிடிக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஏராளமான சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை விற்பனை செய்தது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டனர்.