ஸ்கைப் வழியாக பாலியல் உறவை தேடும் நபர், தனது நிஜ வாழ்க்கையை விட ஸ்கைப் வாழ்க்கையை வாழத் துடிக்கிறார்.
அது அவரது உண்மை வாழ்க்கையை எவ்வாறு திசை மாற்றுகிறது என்பதுதான் மே 12ம் திகதி வெளியாகவுள்ள ‘லென்ஸ்’ என்ற திரைப்படத்தின் சாராம்சம்.
இயக்குநர் மற்றும் கதையின் நாயகனாக நடித்துள்ள ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன், இணையத்தில் பாலியல் காட்சிகள், இணையத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் பாலியல் தொடர்புகள், தொழில்நுட்ப வெளியில் தொலைந்து போகும் தனிநபர் உரிமையை பேசுபொருளாக்கியுள்ளார்.
எல்லோரிடமும் உள்ள ஸ்மார்ட்போன், கணினி தொழில்நுட்பம் போன்றவை வாழ்க்கையை எளிமையாக்குகிறது என்றாலும், அது எவ்வளவு சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது என்ற மறுபக்கத்தை தனது படம் காட்டுகிறது என்று அவர் தெரிவித்தார்.
இணையத்தில் பாலியல் உறவுகள், பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்கள், பாதுகாப்பின்மை பற்றிப் பேசும் இந்த படத்தை பதின்ம வயதினர் மற்றும் அவர்களது பெற்றோர் நிச்சயம் பார்க்க வேண்டும் என்கிறார் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்.
அந்தரங்கத்தை வியாபாரமாக்கும் அவலம்
தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் வெளியாகும் லென்ஸ் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பரிசுகளை வென்ற பிறகு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இணையத்தில் பாலியல் காட்சிகளை வெளியிடும் நபர்களை கேள்வி கேட்காமல், காட்சியில் தோன்றும் நபர்களின் நடத்தையை கேள்வி கேட்கும் போக்கை மாற்றவேண்டும் என்று தமிழில் படத்தை வெளியிடும் இயக்குநர் வெற்றிமாறன் கூறுகிறார்.
”தனி நபர்களின் படங்கள், அந்தரங்க காட்சிகளை படம் எடுப்பது, அதை வைத்து ஏமாற்றுவது போன்ற செயல்கள் மிக சாதாரணமாகிவிட்டன. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதை உணர்த்தும் படம் இது,” என வெற்றிமாறன் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிஜ வாழ்க்கையில் லென்ஸ் பட நாயகன்கள்
லென்ஸ் பட நாயகனை போல நிஜ வாழ்க்கையில் இணைய உலகத்தில் பாலியல் வாழ்க்கையை வாழும் நபர்கள் என்ன ஆகிறார்கள்?
பதில் தருகிறார் பெங்களுருவில் உள்ள தேசிய மனநல சுகாதார மற்றும் நரம்பியல் மருத்துவமனையைச் சேர்ந்த மனோஜ் குமார் சர்மா.
இணையப் பயன்பாட்டிற்கு அடிமையானவர்களை குணப்படுத்தும் சிறப்பு மையத்தில் பணிபுரியும் மருத்துவர் மனோஜ் குமார் சர்மா, ”பெரும்பாலானவர்களுக்கு தங்களது மன உளைச்சலை தீர்க்கும் வழியாக பாலியல் காட்சிகளை பார்க்கும் பழக்கம் தொடங்குகிறது.
நாளடைவில் அந்த காட்சிகளை பார்க்க முடியாத போது, அதுவே மனநிலை பாதிப்பாக அமைந்துவிடுகிறது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் தன்னிடம் சிகிச்சைக்காக வந்த ஐந்து நபர்களும் அதிக சம்பளம் ஈட்டும் வேலையில் உள்ளவர்கள், திருமணமானவர்கள், 25 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றார்.