இந்தியா முழுவதும், கடந்த 7 ஆம் திகதியன்று நடைபெற்ற மருத்துவப் படிப்பில் சேருவதற்கான, நீட் எனப்படும், தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவியர் கடும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
பரீட்சை எழுத வந்த மாணவர்கள் முழுக்கை சட்டை அணிய அனுமதி வழங்கப்படாததால் தேர்வு மையத்துக்குள் செல்வதற்கு முன்பாக மாணவர்கள் கத்தரிக்கோலைக் கொண்டு தங்கள் சட்டையை கத்திரித்தனர்.
அதில் உச்சபட்சமாக கேரளாவின் கன்னூர் பள்ளி ஒன்றில், தேர்வு எழுத வந்த மாணவி ஒருவரின் உள்ளாடையை அகற்றச் சொன்னதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்த சம்பவத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் நான்கு பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கேரளத்தைச் சேர்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் பி.கே. ஸ்ரீமதி, “மாணவியின் மேல் உள்ளாடையை அகற்றுமாறு கூறியது, மனிதாபிமானமற்ற, வெட்கக்கேடான செயல்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
“உள்ளாடையில், மெட்டல் கொக்கி இருந்த காரணத்தால், அதை அகற்றுமாறு கோரப்பட்டிருக்கிறார்.
அதனால், ஒரு நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வுடன் அவரால் தேர்வை எழுதியிருக்க முடியாது.
இது அந்தப் பெண்ணின் மனித உரிமையை மீறும் செயல்” என்று கூறிய ஸ்ரீமதி, ஆடை கட்டுப்பாட்டு விதிமுறைகளை மறு ஆய்வு செய்யுமாறு தேர்வை நடத்தும் சி.பி.எஸ்.இ. நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.
கேரள முதல்வர் இந்தப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும் அவர் கோரினார்.
மனித உரிமை ஆணையம் அழைப்பாணை?
இதற்கிடையில், இந்தச் சம்பவம் குறித்து கேரள மனித உரிமை ஆணையம் உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இது மாணவியின் மனித உரிமையை மீறும் நடவடிக்கை என்றும், தேசிய மனித உரிமை ஆணையம் இதில் தலையிட வேண்டும் என்றும் கோரியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து, மூன்று வாரங்களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ பிராந்திய இயக்குநருக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், கன்னூர் மாவட்ட காவல்துறை தலைவர் மற்றும் கேரள பல்கலைக்கழக பதிவாளர் ஆகியோரும் தனித்தனியாக அறிக்கைகள் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.