சீனாவின் ஹுனான் மாகாணத்தில் வசிக்கும் 92 வயது லியாங் ஃபுஷெங், தன் மரணத்தை எதிர்பார்த்து சமாதியில் காத்திருக்கிறார்!
ஒரு காலத்தில் இந்த மருத்துவருக்கு அழகான குடும்பம் இருந்தது.
பல ஆண்டுகளுக்கு முன்பு ஏதோ நோயால் மனைவியையும் மூன்று குழந்தைகளையும் இழந்துவிட்டார்.
இவருக்கு யாருமில்லை. கிராமத்தினருக்குத் தொந்தரவு கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்து, அருகில் இருந்த மலையில் 1990-ம் ஆண்டு ஒரு வீட்டைக் கட்ட ஆரம்பித்தார்.
செங்குத்தான மரங்கள் சூழ்ந்த மலை என்பதால், கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்வதில் மிகுந்த சிரமம். அதனால் வீட்டைக் கட்டி முடிக்க 14 ஆண்டுகள் ஆனது.
25 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த வீட்டில் ஒரு சமாதியும் இருக்கிறது.
தூக்கம் வரும்போதெல்லாம் சமாதிக்குள் தான் உறங்குகிறார்.
தான் இறந்து போனால், தன் உடலையார், எப்படிப் புதைப்பது என்ற கவலையை யாருக்கும் தர விரும்பாததால் இந்த முடிவை மேற்கொண்டு வருகிறார்.
இந்தச் சமாதிக்கு 5 பூட்டுகள் இருக்கின்றன.
சமாதியைச் சுற்றி மின்சாரம் செலுத்தப்பட்டிருக்கிறது.
இவர் அனுமதியின்றி யாரும் எளிதில் நுழைந்துவிட முடியாத அளவுக்குப் பல விஷயங்களைச் செய்து வைத்திருக்கிறார்.
ஏற்கெனவே கிராம மக்களுக்குத் தன்னுடைய இறுதி விருந்தை வழங்கிய லியாங், இன்றுவரை தன்னைத் தேடி உதவி கேட்டு வரும் மக்களுக்கு மருத்துவம் பார்க்கிறார்.