எதிர்வரும் 15-ஆம் திகதி முதல் 19-ஆம் திகதி வரை நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து உரையாடவுள்ளார்.
இதுதொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் தனது பிறந்த நாளில் ரசிகர்களை சென்னைக்கு வரவழைத்து சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினி காந்த்.
இப்படி ஒரு சந்திப்புக்காக சென்னைக்கு வந்து விட்டுத் திரும்பும் வழியில், மூன்று ரசிகர்கள் சாலை விபத்தில் இறந்து விட்டனர்.
இதன் பின்னர் ரஜினி தனது ரசிகர்களை சந்திப்பதைத் தவிர்த்தார்.
கடந்த 2008-ம் ஆண்டுக்குப் பின்னர் ரசிகர்களுடன் எந்தவித சந்திப்பும் நடைபெறவில்லை.
பிறந்த நாள்களில் பெரும்பாலும் சென்னையில் இருப்பதையே தவிர்த்து வந்தார்.
உடல் நலம் பாதிக்கப்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய பின்னர் தீபாவளி, பொங்கல், பிறந்த நாள் என வழக்கமாக போயஸ் கார்டன் இல்லத்தில் திரண்டிருக்கும் ரசிகர்களை அவ்வப்போது ரஜினிகாந்த் சந்தித்து வந்தார்.
இந்த நிலையில் சுமார் 9 ஆண்டுகளுக்குப் பின் தனது ரசிகர்களை சந்திக்க முடிவு செய்தார்.
இதையடுத்து ஏப்ரல் மாதத்திலேயே ரசிகர்களை சந்திக்கும் முடிவை எடுத்தார்.
ஆனால், இந்த முடிவிலிருந்து திடீரென பின் வாங்கினார். இதனால் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி திடீரென ரத்தானது.
தற்போது, ரசிகர்களை மே 15-ஆம் திகதி சந்திக்கவுள்ளார் ரஜினி. முதல் கட்டமாக 5 நாள்கள் நடக்கும் இந்தச் சந்திப்பு 19-ஆம் திகதி வரை நடக்கிறது.
இதில் கரூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை அவர் சந்திக்கிறார்.
தேர்வு செய்யப்பட்ட ரசிகர்கள் ஒவ்வொருவருடனும் தனித்தனியாக அவர் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.
இந்த நிலையில் நிகழ்வு குறித்து புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
ரஜினி ரசிகர் மன்றம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள மாவட்ட வாரியாக மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி. அடையாள அட்டை இல்லாதவர்கள் கண்டிப்பாக மண்டபத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
வந்து ஏமாற்றமடைய வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.