வாட்ஸ் – அப் செயலியின் புதிய விதிகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட மனு, 5 நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு திங்கள்கிழமை (15) விசாரணைக்கு வருகிறது.
சர்வதேச அளவில் அதிக பயன்பாட்டாளர்களைக் கொண்ட இணையவழி குறுஞ்செய்தி பகிர்வு செயலியான வாட்ஸ் – அப், புதிய தனிநபர் ரகசியக் கொள்கை ஒன்றை கடந்த ஆண்டு கொண்டு வந்தது.
அதன்படி, வாட்ஸ் – அந்தப் பயன்பாட்டாளர்களின் தொலைபேசி எண்கள், அவர்கள் பயன்படுத்தும் செல்லிடப்பேசியின் வகை, அவற்றில் இடம்பெற்றுள்ள இயக்க முறை ஆகியவை தொடர்பான தகவல்களை, தனது தாய் நிறுவனமான முகநூலில் இணைக்க முடிவு செய்தது.
இதன்மூலம் வாட்ஸ் – பயன்பாட்டாளர்கள் முகநூல் பக்கத்தைப் பயன்படுத்தும்போது, அவர்களுக்குப் பொருத்தமான சலுகைகள், விளம்பரங்களை தனித்தனியே வழங்க முடியும் என்று அந்த நிறுவனம் விளக்கமளித்திருந்தது.
மேலும் இந்த புதிய கொள்கையை ஏற்பவர்கள் வாட்ஸ் – அப் சேவையைத் தொடரலாம் என்றும், விரும்பாதவர்கள் அந்த செயலியைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடலாம் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்த நடவடிக்கையானது வாட்ஸ் – அப் பயன்பாட்டாளர்களின் அனுமதியின்றி, அவர்களது தனிப்பட்ட தகவல்களைப் பிற தளங்களில் பகிர்வதற்கான முயற்சி என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் பயன்பாட்டாளர்களின் ரகசியம் காக்கும் உரிமைகள் மீறப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
இதுதொடர்பான பொதுநல மனுவொன்றை சமூக ஆர்வலர்கள் கர்மன்யா சிங் சரீன், ஷ்ரேயா சேதி ஆகியோர் தில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
அதன் மீது சில புதிய உத்தரவுகளை பிறப்பித்து, அந்த மனுவை தில்லி உயர் நீதிமன்றம் முடித்து வைத்தது.
இதைத்தொடர்ந்து மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மேல்முறையீடு செய்தனர்.
அந்த மனு, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.
அதன்படி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு, வரும் திங்கள்கிழமை அந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.