தொழில்நுட்ப வசதிகள் எந்த அளவுக்கு நமக்கு விரைவான சேவையை வழங்கி, நமது பணிச்சுமையை குறைக்கிறதோ, அதே அளவுக்கு ஆபத்துகளும் அதிகரிக்கின்றன.
சைபர் தாக்குதல்களால் தொழில்நுட்பங்கள் முடக்கப்படும்போது மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலக சமுதாயத்திற்கு இந்த சைபர் தாக்குதல் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.
இந்த நிலையில், நேற்று உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நிறுவனங்களின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியா, பிரிட்டன், அமெரிக்கா, சீனா, ரஷியா, ஸ்பெயின், இத்தாலி மற்றும் தைவான் உள்பட 99 நாடுகளில் சுமார் 45 ஆயிரம் தாக்குதல்கள் நடந்திருப்பதாக காஸ்பர்கை ஆய்வக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சைபர் தாக்குதல்களால் அரசு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக பிரிட்டனில் தேசிய சுகாதார சேவைகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் நோயாளிகளை திருப்பி அனுப்பும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
மருத்துவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஆலோசனை நேரத்தையும் ரத்து செய்யும் கட்டாயத்திற்கு ஆளாகினர்.
ரஷ்யாவும் அதிகளவிலான இணைய தாக்குதல்களை கண்டுள்ளதாக சில தகவல்கள் கூறுகின்றன.
ஜெர்மனியில் ஓர் உள்ளூர் ரெயில்வே பயணச்சீட்டு இயந்திரம் உள்பட பாதிப்படைந்த கணினிகளின் புகைப்படங்களும், இத்தாலியில் ஓர் பல்கலைக்கழக கணினி ஆய்வகத்தின் படமும் பொதுமக்கள் ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.
ஸ்பெயினிலும் தொலைத் தொடர்பு உள்ளிட்ட நிறைய நிறுவனங்கள் இந்த இணைய தாக்குதலால் பாதிப்படைந்துள்ளன.
இந்த தாக்குதலுக்கான சைபர் ஆயுதங்கள், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தில் இருந்து திருடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த சக்திவாய்ந்த கருவிகளை கொண்டு உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் மீது இணைய தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குட்பட்ட கணினிகள் ஒரு ப்ரோகிராமால் தற்காலிகமாக முடக்கப்பட்டு 300 டாலர்கள் மதிப்புள்ள பிட்காயின்களை செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளன.
ரான்சம்வேர் தாக்குதல் எனப்படும் பிணைத்தொகை கேட்கும் இந்த மால்வேர், இமெயில்கள் மூலம் அதிவேகமாக பரவியுள்ளன.
மால்வேரின் செயல்பாடு பரவத் தொடங்கிய சில மணி நேரத்திற்குள் உலகம் முழுவதிலும் இருந்து 75,000 தாக்குதல்கள் வரை கண்டறியப்பட்டதாக இணைய பாதுகாப்பு நிறுவனமான அவாஸ்ட் கூறியுள்ளது.
24 மணி நேரத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கணினிகள் பாதிக்கப்பட்டிருப்பதாக மால்வேர்டெக் டிராக்கர் கண்டறிந்துள்ளது.
இந்த மிகப்பெரிய தாக்குதலானது, இணைய வளங்கள் விவகாரத்தில் அமெரிக்காவின் தவறான அணுகுமுறையை பிரதிபலிப்பதாக சில சைபர் பாதுகாப்பு வல்லுனர்களும், தனியுரிமை ஆர்வலர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.