நடிகர் ரூபேஷ் ஷெட்டி
நடிகை ரம்யா
இயக்குனர் தேவராஜ் குமார்
இசை சதீஷ் ஆர்யன்
ஓளிப்பதிவு வீனஸ் மூர்த்தி
திருமணமான புதுத் தம்பதியர் தங்களது தேனிலவை கொண்டாட காட்டுப் பகுதிக்குள் செல்கிறார்கள்.
இவர்கள் செல்லும் வழியிலேயே காரை நிறுத்தி, இருவரும் உறவு கொள்ள முயற்சிக்கிறார்கள்.
அப்போது மர்மமான ஒரு உருவம் இவர்களை தாக்கி கொலை செய்கிறது. இதையடுத்து மீடியா பரபரப்பாகிறது.
அவர்கள் எப்படி இறந்தார்கள்? என்பது குறித்து பல்வேறு தகவலும் பரவுகிறது.
இதையடுத்து டிவி ரிப்போர்ட்டரான நாயகி ரம்யா, இந்த கொலை பற்றி தனியாக ஒரு நிகழ்ச்சி தயாரிக்கப்போவதாக சொல்லி காட்டுக்குள் தனது நண்பர்களுடன் புறப்படுகிறார்.
அவரை காதல் செய்வதாக சுற்றி வரும் நாயகனையும் கூடவே அழைத்துச் செல்கிறாள்.
சென்ற இடத்தில் நாயகியின் நண்பர்களும் மர்மமான முறையில் இறக்கிறார்கள்.
அந்த மர்ம உருவம் பெண்களையே குறி வைத்து தாக்குகிறது. இதற்கு காரணம் என்னவென்பதை நாயகி மற்றும் நாயகன் கண்டுபிடித்தார்களா?
அந்த மர்மமான உருவத்தில் சுற்றும் நபர் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
கன்னடத்தில் டேஞ்சர் ஜோன் என்ற பெயரில் வெளிவந்த படமே தமிழில் மர்மக்காடு என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது.
இயக்குனர் தேவராஜ் குமார் படத்தில் திகில் ஏற்படுத்தக்கூடிய காட்சிகள் நிறைய வைத்திருக்கிறார்.
ஆனால், அதை சரியாக படமாக்கப்படாததுதான் மிகப்பெரிய குறையாக தெரிகிறது. படத்தில் பெரும்பாலான காட்சிகள் இருட்டிலேயே படமாகியிருந்தாலும், காட்சிகள் தெளிவாகத்தான் இருக்கின்றன.
இருப்பினும் திகில் ஏற்படாதது வருத்தமே.
படத்தின் நாயகி ரம்யா ஏற்கனவே பார்த்த முகம்தான் என்றாலும், இந்த படத்தில் ரிப்போர்ட்டருக்கான மிடுக்கு இவருக்கு இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.
திகில் காட்சிகளிலும் அதற்குண்டான முகபாவனைகளை கொடுக்க தவறியிருக்கிறார்.
நாயகன் ரூபேஷ் ஷெட்டிக்கு படத்தில் நடிப்பதற்குண்டான வாய்ப்புகள் ரொம்பவும் குறைவுதான்.
இருப்பினும், கதாபாத்திரத்திற்கேற்ற நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.
சில இடங்களில் இவருடைய நடிப்பும் ரொம்பவும் செயற்கையாக தெரிகிறது.
மற்றபடி படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வந்தாலும் யாரும் மனதில் நிற்கவில்லை.
வீனஸ் மூர்த்தியின் ஒளிப்பதிவு படத்திற்கு கொஞ்சம் கைகொடுத்திருக்கிறது. சதீஷ் ஆர்யனின் பின்னணி இசை இரைச்சலாகவே இருக்கிறது.
பாடல்களும் பெரிதாக இல்லை.
மொத்தத்தில் ‘மர்மக்காடு’ மர்மம் இல்லை.