பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கு கேரளா மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள் வரிவிலக்கு அளித்துள்ளன.
உலகளவில் விளையாட்டு பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது.
அதன்படி குத்துச்சண்டை பிரபலம் மேரி கோம், கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அந்தவகையில், இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் என்பவர் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற மே 26-ந் தேதி வெளியாக உள்ள இப்படத்தை 200 நாட் அவுட் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது.
இதில் இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு மதன் கார்க்கி பாடல்கள் மற்றும் வசனங்களை எழுதியிருக்கிறார்.
இந்நிலையில், இத்திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளித்து கேரளா மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.
இரு மாநில அரசுகளின் இந்த முடிவுக்கு அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ரவி பக்சந்த்கா வரவேற்பு தெரிவித்துள்ளார்.