சாமிதரிசனம் செய்த பின்னர் நடிகர் ராதாரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரஜினிகாந்த் எதுவாக இருந்தாலும் கடவுள் முடிவு எடுப்பார் என்கிறார். எனவே அவர் எந்த முடிவு எடுத்தாலும் வரவேற்கத்தக்க முடிவு தான்.
அவர் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன். தமிழக மக்களிடம் அவர் அதிகமான புகழ், பணம் சம்பாதித்து உள்ளார். எனவே இந்த மக்களுக்கு செலவு பண்ண தயாராக இருக்கிறார் என நினைக்கிறேன்.
இதனை அவர் அரசியலுக்கு வரும்போதுதான் பார்க்க வேண்டும். அவர் யார், யாரை நல்லவர் என நினைக்கிறாரோ அவர்களை வைத்து கொள்ளலாம்.
தீபாவின் கணவர், சாரதி எல்லாம் அரசியலுக்கு வரும்போது, ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதில் தவறு இல்லை. தற்போது பிளவுபட்டு கிடக்கும் அ.தி.மு.க.வில் இருக்க எனக்கு தகுதி இல்லை என கருதுகிறேன்.
பொதுமக்கள் கருத்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக வரவேண்டும் என உள்ளது. அவருக்கு எல்லா தகுதிகளும் உள்ளன.