உடல் பருமனாக இருந்தாலும் மருத்துவ ரீதியாக உடல் தகுதியுடன் இருக்க முடியும் என்பது ஒரு கட்டுக்கதை என போர்த்துக்கலில் உரையாற்றிய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்னமும் பதிவு செய்யப்படாத இந்த ஆய்வு, பிரிட்டனில் வாழும் 35 லட்சம் மக்களின் குடும்ப மருத்துவர்களின் ஆவணங்களை உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது
உடல் பருமனாக இருக்கும் நபர்களுக்கு ஆரம்ப காலங்களில் இதய நோய், நீரிழிவு அல்லது அதிக கொழுப்பு ஆகியவை இருந்ததற்கு எந்த அறிகுறியும் இல்லையென்றாலும், இந்நோய்களில் இருந்து அவர்களின் பிற்கால வாழ்க்கையில் பாதுகாக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது,
முன்னைய ஆராய்ச்சி முடிவுகளுக்கு முரணாக அமைந்துள்ளது.
உடல் பருமன் குறித்த ஐரோப்பிய காங்கிரஸ் கூட்டத்தில், இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகளின் சுருக்கம் விவாதிக்கப்பட்டது.
கவர்ச்சிகரமான கோட்பாடாகக் கருதப்படும் ”பருமன் ஆனாலும் உடல் தகுதியுடன் இருப்பவர்கள்” என்பது பருமனாக இருக்கும் நபர்களின் வளர்சிதை மாற்றக் காரணிகளான ரத்த அழுத்தம் மற்றும் ரத்த சர்க்கரை அளவுகள் மருத்துவ ரீதியாக பரிந்துரைக்கப்பட்ட அளவுகளுக்கு கீழ் இருந்தால், கூடுதல் எடையுடன் இருப்பது பாதகமில்லை என்ற தத்துவத்தை சார்ந்து உள்ளது.
கடந்த 1995 முதல் 2015 ஆம் ஆண்டு வரை கிடைக்கப் பெற்ற பல மில்லியன் நோயாளிகளின் மருத்துவ ஆவணங்களை பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் ஆராய்ந்த ஆய்வாளர்கள் மேற்கூறிய கூற்று உண்மையா என்று சோதித்தனர்.
30 அல்லது அதற்கு மேலான பி.எம்.ஐ. எனப்படும் உடல் நிறை குறியீட்டெண் உள்ள உடல் பருமனான நபர்களின் உடல் கூறுகளை இந்த ஆய்வின் ஆரம்பத்தில் கண்காணித்த போது, அவர்களுக்கு இதய நோய், நீரிழிவு அல்லது அதிக கொழுப்பு ஆகியவை இருந்ததற்கு எந்த அறிகுறியும் இல்லையென்பது தெரியவந்துள்ளது.
மிகவும் பருமனாக இருந்த நபர்கள், வளர்சிதை மாற்றக் காரணிகள் தொடர்பாக ஆரோக்கியமாக இருந்தாலும், அவர்களுக்கு சாதாரண எடையுடன் இருப்பவர்களை விட இதய நோய், பக்கவாதம் மற்றும் இதை செயலிழப்பு ஏற்படுவதற்கு அதிக ஆபத்து இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது குறித்து பிரிட்டீஷ் ஹார்ட் ஃபவுண்டேஷனை சேர்ந்த மருத்துவரான மைக் நாப்டன் கூறுகையில், ‘பரந்த அளவில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு பல ஆண்டுகளாக நிலவி வந்த ஓர் கட்டுக்கதை குறித்து தெளிவுபடுத்த முயன்றது போல அடிக்கடி ஆய்வுகள் நடந்ததில்லை” என்று தெரிவித்தார்.