எனது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக முடிவெடுத்த உடனே, விமானப்படை வீரகளுக்குதான் முதல் காட்சி என தனக்கு தோன்றியதாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
உலகளவில் விளையாட்டு பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி வருகிறது.
அதன்படி குத்துச்சண்டை பிரபலம் மேரி கோம், கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
அந்தவகையில், இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவானாக திகழ்ந்த சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு ‘சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ்’ என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தை ஜேம்ஸ் எர்ஸ்கின் என்பவர் இயக்கி வருகிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படம் வருகிற மே 26-ந் திகதி வெளியாக உள்ள இப்படத்தை 200 நாட் அவுட் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தி மொழியில் உருவாகியுள்ள இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுகிறது. இதில் இப்படத்தின் தமிழ் பதிப்பிற்கு மதன் கார்க்கி பாடல்கள் மற்றும் வசனங்களை எழுதியிருக்கிறார்.
இந்நிலையில், இந்தப்படத்தின் பிரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சச்சின் “ எனது வாழ்க்கை சினிமாவாக உருவாகிறது என முடிவெடுத்த உடனேயே, எனக்கு படத்தின் முதல் காட்சி விமானப்படை வீரர்களுக்கு காண்பிக்கப்பட வேண்டும் என தோன்றியது” எனக் கூறியுள்ளார்.
இந்திய விமானப்படையில் சச்சின் டெண்டுல்கள் கவுரவ குரூப் கேப்டன் பொறுப்பை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.