சரியாக தூங்கினால் அழகாகவும் சரியாக தூங்கவில்லை என்றால் அழகு குறைந்து மந்தமாகவும் காணப்படுவது உண்மை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
ஓரிரு இரவுகள் சரியாகத் தூங்கவில்லை என்றால் நாம் அழகு குறைந்து காணப்படுவதற்கு அதுவே போதுமானதாக உள்ளது என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
உங்கள் கண்களைச் சுற்றி கருவளையம் மற்றும் கண் இமைகள் வீங்கியிருப்பதால் பிறர் உங்களிடம் சகஜமாக பழகாமல் போகக் கூடும் என்றும் இந்த ஆய்வில் தெரிகிறது.
சோர்வான முகத்துடன் காணப்படுபவர்கள் ஆரோக்கியம் குறைந்தவர்களாகவும், எளிதில் பழகும் தன்மையற்றவர்களைப் போலவும் காட்சியளிப்பதாகவும் அவர்களுக்கு தொடர்பில்லாத நபர்களால் அவர்களின் புகைப்படங்களை பார்த்து கூறப்பட்டுள்ளது.
இந்த தூங்கும் ஆய்வில் ஆண், பெண் என 25 பல்கலைக்கழக மாணவர்களை அதிகமாக தூங்கும்படி ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக் கொண்டனர்.
இந்த ஆய்வில் பங்கேற்பவர்களுக்கு பணம் வழங்கப்பட்டது; மேலும் அவர்கள் தூங்கும் நேரத்தில் சரியாக தூங்குகிறார்களா என்றும் பிற நேரத்தில் தூங்காமல் இருக்கிறார்களா என்பதை கவனிக்கும் ஒரு கருவி கொடுக்கப்பட்டது.
அவர்கள் இரண்டு தொடர் இரவுகள் நன்றாக தூங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஒரு வாரம் கழித்து அவர்கள் ஒரு நாளில் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்க வேண்டும் என்றும் தொடர்ந்து இரண்டு நாட்கள் இவ்வாறு குறைந்த நேரங்கள் மட்டுமே தூங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
நன்றாக தூங்கிய இரவிற்கு பின்னர், நன்றாக தூங்காத இரவிற்கு பின்னர் என இரண்டு தருணங்களிலும் ஆய்வில் கலந்து கொண்டவர்களின் ஒப்பனை இல்லாத புகைப்படத்தை ஆராய்ச்சியாளர்கள் எடுத்துக் கொண்டனர்.
பின் ஸ்வீடன் தலைநகர், ஸ்டாக்ஹோமில் அவர்களை அறிந்திராத 122 நபர்களிடம் அந்தப் புகைப்படங்களை காட்டி அவர்களின் அழகு, ஆரோக்கியம், தூக்கத்தன்மை, நம்பிக்கைத்தன்மை ஆகியவற்றை பற்றி கூறுமாறு கேட்டனர் மேலும் “புகைப்படங்களில் உள்ளவர்களிடம் எந்தளவிற்கு பழக விரும்புகிறீர்கள் என்றும் கேட்டனர்.”
புகைப்படங்களில் உள்ளவர்கள் சோர்வாக தெரிந்தால் அவர்களின் மீதிப்பீடும் குறைந்தது.
மேலும் அவர்கள் சோர்வாக இருக்கும் நபர்களுடன் பழக விரும்பவில்லை என்றும் அவர்கள் ஆரோக்கியம் குறைந்தவர்களைப் போல் நினைத்து கொள்ளப்பட்டதாகவும் ஆராய்ச்சி பத்திரிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
சோர்வாக இருப்பவர்களைக் காட்டிலும் சுறுசுறுப்பாக தோற்றமளிக்கும் நபர்களுடனே அதிகமான நபர்கள் பழக விரும்புகிறார் என இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின் “முடிவால் மக்களை பீதியடைய வைக்க வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல; அவ்வப்போது தூக்கத்தை தவற விடுபவர்கள், தாங்கள் சோர்வாக காட்சியளிப்பதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.” என்று இந்த ஆய்வின் தலைமை ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த ஆய்வு, தூக்கம் என்பது எந்தளவிற்கு முக்கியம் என்பதை உணர்த்துகிறது என தெரிவிக்கின்றனர்.