நடிகர் | சபாபதி |
நடிகை | லுகுனா அஹ்மத் |
இயக்குனர் | சாம் இம்மானுவேல் |
இசை | ஆதித்யா மஹாதேவன் |
ஓளிப்பதிவு | கார்த்திக் பாலா டி |
பிளாக் பாண்டி தன் நண்பர்களோடு இணைந்து, தான் வெளிநாட்டில் இருந்து வருவதாகவும், வயதானவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து பென்சன் வாங்கித் தருவதாகவும் கூறி, ஜோதிலட்சுமியை முன்னிருத்தி பலரிடம் பணத்தை வாங்கிவிட்டு ஏமாற்றிவிட்டு ஊரை காலி செய்கின்றார்.
பணம் கொடுத்தவர்கள் அனைவரும் ஜேதிலட்சுமியை திட்ட அவமானம் தாங்காமல் ஒருகட்டத்தில் அவர் இறந்து விடுகிறார்.
அந்த பணத்தை எடுத்துக் கொண்டு தனது சொந்த ஊருக்கு சென்ற பாண்டி மற்றும் அவனது நண்பர்கள், அந்த பணத்தை கொண்டு புதிய தொழில் தொடங்க முடிவு செய்கின்றனர்.
இந்த விஷயத்தை அதே ஊரில் வசிக்கும் நாயகனான சபாபதியிடம் தெரிவிக்க, போட்டோகிராபி மீது ஈர்ப்புக் கொண்டிருக்கும் சபாபதி, அந்த பணத்தை வைத்து ஒரு ஸ்டூடியோ தொடங்கலாம் என்று கூற ஒரு ஸ்டூடியோவை தொடங்குகின்றனர்.
ஆனால் மக்களிடையே அந்த ஸ்டூடியோ வரவேற்பை பெறாததால், ஒரு மாடலை அவர்களின் ஸ்டூடியோ விளம்பரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்கின்றனர்.
இவ்வாறாக பெரிய மாடலை தேர்ந்தெடுத்தால் அதிக பணம் செலவாகும் என்பதால், உள்ளூர் பூக்காரியான ஜாங்கிரி மதுமிதாவை மாடலாக நடிக்க வைத்து பிரபலப்படுத்துகின்றனர்.
மாடலிங்கில் நாட்டத்துடன் இருக்கும் நாயகி லுகுனா அஹமதின் தோழி அந்த விளம்பரத்தை பார்த்தவுடன், அந்த ஸ்டூடியோவில் போட்டோ எடுக்க வேண்டும் என்று விரும்புகிறாள். இதையடுத்து லுகுனா அஹமதுடன் சென்ற அவளது தோழி அந்த ஸ்டூடியோவில் போட்டோ எடுத்துக் கொள்கிறாள்.
லுகுனா அமீரை பார்த்த முதல் சந்திப்பிலேயே அவள் மீது காதல் கொண்ட சபாபதி, லுகுனாவுக்கு தெரியாமலேயே அவளையும் போட்டோ எடுத்து அனுப்பிவிடுகிறான்.
இதையடுத்து அந்த போட்டோ குறித்து சபாபதியிடம் லுகுனா கேட்கும் போது, லுகுனாவை காதலிப்பதாக சபாபதி கூற, ஒரு கட்டத்தில் நாயகியும் அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள்.
இந்நிலையில், லுகுனாவின் தந்தையும், காவல்துறை ஆணையருமான ஆடுகளம் நரேனிடம் தனது காதல் பற்றி லுகுனா கூறுகிறாள்.
இதையடுத்து நரேன், சபாபதியை நேரில் அழைத்து வர சொல்கிறார்.
நரேனை பார்க்க சபாபதி, பாண்டியுடன் செல்கிறார். அங்கு பாண்டியை பார்த்த நரேன், இவனால் தான் தனது அம்மா ஜோதிலட்சுமி இறந்துவிட்டதாகக் கூறி அவனை பிடிக்க செல்லும் போது, பாண்டி அங்கிருந்து தப்பித்து செல்ல, சபாபதியை பிடித்து நரேன் விசாரிக்கிறார்.
அந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கதறியும், சபாபதியின் பேச்சைக் கேட்காத நரேன் தனது மகளின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்கிறாரா? சபாபதி – லுகுனா அஹமதின் காதல் வெற்றி பெற்றதா? பாண்டி என்ன ஆனான்? கடைசியில் என்ன நடந்தது? என்பது படத்தின் மீதிக்கதை.
நாயகன் சபாபதி கதையின் போக்குக்கு ஏற்ப சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். லுகுனா அஹமது அழகான தேவதையாக திரையில் பளிச்சிடுகிறார்.
அவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. பிளாக் பாண்டி படம் முழுக்க காமெடி செய்ய முயற்சி செய்திருக்கிறார்.
எனினும் ஒரு சில இடங்களிலேயே அவரது காமெடி பலித்திருக்கிறது. ஆடுகளம் நரேன், ரேகா சுரேஷ், ஷாலு, ஜாங்கிரி மதுமிதா என மற்ற அனைவரும் படத்திற்கு பக்கபலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
இப்படத்தின் மூலம் நட்பு வேண்டும், நல்ல நட்பு வேண்டும், நம்மை தவறான பாதைக்கு கொண்டு செல்லும் நட்பினை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு வித்தியாசமான கதையை முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் எஸ்.சாம் இம்மானுவேல்.
டி கார்த்திக் பாலாவின் ஒளிப்பதிவும், ஆதித்யா மகாதேவனின் இசையும் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. குறிப்பாக அஷ்மிதா ஆடும் அந்த பாடல் ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் `கேக்கிறான் மேய்க்கிறான்’ ஏமாற்றுகிறான்.