நேபாள நாட்டைச் சேர்ந்த ஷெர்பா இன மக்களின் உடல்கூறு இயற்கையாகவே பிராண வாயுவை திறமையாக பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்று ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
தசை மாதிரிகளை கொண்டு சோதனை
கடல் மட்டத்தில் உள்ள சூழலுக்குப் பழக்கப்பட்டவர்களை விட இந்த ஷெர்பா இன மக்களின் பிராண வாயுப் பயன்பாட்டுத்திறன் அதிகமாக உள்ளது என அந்த ஆய்வு கூறுகின்றது.
உயரமான மலைப்பகுதிகளில் வாழும் மக்கள் எவ்வாறு அந்த இடத்திற்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்து கொள்கின்றனர் என்று கண்டறிய நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
5,300 மீட்டர் உயரத்தில் உள்ள மலையேறுபவர்களின் தசை மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்படுவது மற்றும் எவெரெஸ்ட் மலையின் அடிவார முகாமில் அவர்களை உடற்பயிற்சி செய்வதற்கான வண்டியை ஓட்ட வைப்பது போன்றவற்றை கொண்டதாக இந்த ஆய்வு அமைத்தது.
ஷெர்பா மக்களின் உடலில் உள்ள சாதகமான ஒரு மரபணு மாற்றமானது, அவர்களது இந்த நிலைகளில் உயிர்வாழத் தேவையான ரசாயன வழிமுறையை (மெட்டபொலிசம்) அவர்களுக்கு அளிக்கின்றது என்கிறது அந்த ஆய்வு.
இமய மலைப் பிரதேசத்தைப் பார்க்கவருபவர்களை விட, குறைந்த பிராணவாயு உள்ள சூழலில் ஷெர்பா மக்கள் மட்டும் மூச்சுத் திணறலை சமாளிக்க முடிகிறது என்பது நீண்டகாலமாக ஒரு புதிராக இருந்தது.
மலையேறுபவர்கள், குறைந்த பிராணவாயு இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு தங்களை தகவமைத்துக் கொள்ள வேண்டுமெனில் அவர்களின் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கவேண்டும். அதன்மூலம் பிராண வாயுவை கொண்டுசெல்லும் திறனை அதிகரிக்கமுடியும்.
இதற்கு மாறாக, ஷெர்பா மக்களின் ரத்தம் இயற்கையாகவே லேசானதாக, குறைவான ரத்த அணுக்கள் மற்றும் பிராணவாயுவை கொண்டதாக உள்ளது.
‘எவ்வளவு பிராணவாயுவை நீங்கள் கொண்டிருக்கிறீர்கள் என்பதைவிட, அதைவைத்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதுதான் முக்கியம் என்பதை இது காட்டுகிறது,” என்கிறார் புதிய ஆய்வின் மூத்த ஆராய்ச்சியாளர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆண்ட்ரூ முரே.