நடிகர் | சந்தோஷ் கன்னா |
நடிகை | சோனியா அகர்வால் |
இயக்குனர் | பழனிவேல் வி எஸ் |
இசை | ஜான் பீட்டர் ஏ சி |
ஓளிப்பதிவு | பார்த்திபன் எஸ் |
கொல்லிமலை அருகே உள்ள வளையபட்டி கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு தரமான கல்வி கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இலவசமாக பள்ளி நடத்தி வருகிறார் ராஜன்.
இந்த ஊருக்கு, வெளியூரில் படித்து முடித்துவிட்டு வரும் நாயகன் சந்தோஷ் கண்ணா, ராஜனுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.
இதே ஊரில் பண்ணையாரான பாலாசிங், தனது தம்பி கராத்தே ராஜா, மூகாம்பிகை ரவி ஆகியோரின் உதவியுடன் தனியார் பள்ளிக்கூடம் வைத்து, கோடி கோடியாக சம்பாதித்து வருகிறார்.
ராஜன் இலவசமாக கல்வி வழங்குவதால், இவர்களது பள்ளிக்கூடத்துக்கு மாணவர்கள் சேர்க்கை குறைகிறது. இதனால், ராஜனை எப்படியாவது அந்த பள்ளிக்கூடத்தை நடத்த விடாமல் தடுக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர்.
சந்தோஷின் மாமன் மகளான நாயகி காயத்ரி, தனது மாமனை திருமணம் செய்துகொள்ள ஆசையுடன் இருக்கிறாள்.
இந்நிலையில், இரவானதும் நாயகனுக்கு மட்டும் அவனது பெயரை ஒரு பெண் அழைப்பது போன்று குரல் கேட்கிறது.
அதேநேரத்தில் கொல்லிமலையில் வசிக்கும் ஒரு சாமியார் தன் வாழ்நாள் முடியும் தருவாயில் தன்னிடம் உள்ள சக்திகளையெல்லாம் நாயகனுக்கு கொடுத்துவிட்டு மறைகிறார்.
அந்த சக்திகளை வைத்துக் கொண்டு நாயகன் ஊரில் இறந்துபோனவர்களையெல்லாம் உயிர்ப்பிக்கிறார்.
இந்நிலையில், ஆசிரியர் ராஜனை, பாலாசிங்கின் தம்பிகள் கொலை செய்கிறார்கள். அவரையும் உயிர்பிக்க முயற்சிக்கும் வேளையில், ராஜனின் ஆவி, தன்னை காப்பாற்ற வேண்டாமென்றும், தனக்கு பதிலாக அந்த பள்ளிக்கூடத்தை சிறப்பாக செயல்படுத்துமாறும் நாயகனிடம் கேட்டுக் கொண்டு மறைந்துவிடுகிறது.
இதையடுத்து நாயகன் அந்த இலவச பள்ளிக்கூடத்தை ஏற்று சிறப்பாக நடத்தினாரா? ஆசிரியர் ராஜனை கொன்றவர்களை பழிதீர்த்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் சந்தோஷ் கண்ணாவுக்கு நாயகனுக்குண்டான தோற்றம் இருந்தாலும் அவரால் சிறப்பாக நடிக்க முடியவில்லை.
சென்டிமெண்ட் காட்சிகளில் ஏனோதானோவென்று நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், காமெடி, ரொமான்ஸ் என எல்லாவற்றிலும் இவரது நடிப்பு சொதப்பலே.
இவர் மீது குறை சொல்வதைவிட இவரை இயக்குனர் சரியாக வேலை வாங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
நாயகி காயத்ரி ஏற்கெனவே பார்த்த முகம் தான் என்றாலும், இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
வீர வசனம் பேசுவதாகட்டும், தனது மாமனுடன் ரொமான்ஸ் செய்வதாகட்டும் இரண்டிலும் தனது பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.
பண்ணையாராக வரும் பாலாசிங், அவரது தம்பிகளாக வரும் கராத்தே ராஜா, மூகாம்பிகை ரவி ஆகியோரும் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள்.
ஆசிரியராக வரும் ராஜனுக்கு கௌரவமான வேடம். அந்த வேடத்தை தனது சிறப்பான நடிப்பால் பூர்த்தி செய்திருக்கிறார். நெல்லை சிவா, கொட்டாங்குச்சி, கிரேன் மனோகர் ஆகியோரின் காமெடி பெரிதாக எடுபடவில்லை.
நாயகன் கூடவே வரும் பாவா லட்சுமணனுக்கு நடிப்பதற்கு பெரிதாக வாய்ப்பு வழங்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. பஞ்சாயத்து தலைவர்களாக ஆர்.சுந்தர்ராஜன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பை சிறப்பாக அளித்திருக்கிறார்கள்.
பொலிஸ் அதிகாரியாக வரும் சோனியா அகர்வால் கடைசி சண்டை காட்சியில் மட்டும் தலையை காண்பித்துவிட்டு சென்றிருக்கிறார். மற்றபடி அவருக்கு சொல்லும்படியான கதாபாத்திரம் இல்லை.
இயக்குனர் பழனிவேல், தனியார் பள்ளிக்கூடங்கள் தங்கள் பள்ளிக்கூடத்தின் தரத்திற்காக 9-ம் வகுப்பிலேயே 10-வகுப்புக்கான பாடத்தையும், 11-ஆம் வகுப்பிலேயே 12-ஆம் வகுப்புக்கான பாடத்தையும் மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து, அவர்களின் மீது படிப்பு சுமையை அதிகமாக சுமத்தி அவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்குகிறார்கள்.
அவர்களை புரிந்து படிக்க வைத்தாலே இந்த மாதிரியான சுமைகளை அவர்கள் மீது ஏற்ற வேண்டியதில்லை என்பதை வலியுறுத்தும் விதமாக இப்படத்தை எடுத்திருக்கிறார்.
ஆனால், சொல்ல வேண்டிய கருத்தை ஆழமாக சொல்லாமல் தேவையில்லாத காட்சிகளையெல்லாம் கதையின் ஊடே கொண்டுசென்று எந்தவொரு விஷயமும் நமக்கு புரியும்படி இல்லாமல் செய்துவிட்டார்.
அதேபோல், ஆவி மனிதர்களை போல சாதாரணமாக நடமாடுவது, இறந்தவர்களை உயிர் பிழைத்து வரவைப்பது என நம்பும்படியான விஷயங்களும் படத்தை பார்ப்பதற்கு தடையாக இருக்கிறது.
அதேபோல், ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் வேலை வாங்குவதிலும் ரொம்பவும் கவனம் சிதறியிருக்கிறார்.
ஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் எல்லாம் அருமையாக இருக்கிறது. அம்மன் பாடலும், ஆரம்பத்தில் வரும் கும்மி பாடலும் ரசிக்க வைக்கிறது. பழனிவேலின் பின்னணி இசை பரவாயில்லை ரகம்தான். பார்த்திபனின் ஒளிப்பதிவும் பரவாயில்லை ரகம்தான்.
மொத்தத்தில் ‘சாயா’ சாய்க்கவில்லை.