பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார். இவரது மனைவி பர்வதம்மா. 77 வயதாகும் இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் அவர் கடந்த 16 நாட்களுக்கு முன்பு பெங்களூர் எம்.எஸ். ராமையா நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நிலை நேற்று இரவு மிகவும் மோசம் அடைந்தது. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை 4.40 மணி அளவில் அவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார்.
அவரது மறைவிற்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள் அனுதாபம் தெரிவித்துள்ளனர். பர்வதம்மாவின் மறைவைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
பர்வதம்மா உடல் பெங்களூரு சதாசிவம் நகரில் உள்ள அவரது மகன் ராகவேந்திரா ராஜ்குமாரின் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு நடிகர் அம்பரீஷ் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். உறவினர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதன்பிறகு பர்வதம்மா உடல் சதாசிவம் நகரில் உள்ள பூர்ணபிரஜா மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அங்கு கர்நாடகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த பொது மக்கள், ராஜ்குமார் ரசிகர் மன்றத்தினர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இன்று மாலை பர்வதம்மா உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவரது சொந்த ஸ்டூடியோவான கண்டீரவா ஸ்டூடியோவில் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இந்த ஸ்டூடியோவில் தான் ராஜ்குமார் சமாதி உள்ளது குறிப்பிடத்தக்கது. கணவரின் சமாதி அருகே பர்வதம்மா உடலும் அடக்கம் செய்யப்படுகிறது.
பர்வதம்மாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பெங்களூருவில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. மைசூரிலும் தியேட்டர்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகம் முழுவதும் இன்று திரைப்பட தயாரிப்பு பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
பர்வதம்மாவின் உடல் வைக்கப்பட்டுள்ள சதாசிவம் நகரில் உள்ள பள்ளிகள் அனைத்தையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பிற பகுதிகளை பொறுத்த வரையில் பாதுகாப்பு இருப்பதாக உணர்ந்தால் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புமாறு பெற்றோர்களுக்கு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
பள்ளி நிர்வாகங்களை தொடர்பு கொள்ளுமாறும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்எச்சரிக்கை நடவடிக்கையாக பெங்களூரு மற்றும் மைசூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக – கர்நாடக எல்லையான அத்திப் பள்ளியிலும் கர்நாடக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள னர். கன்னட மக்கள் மத்தியில் ராஜ்குமாரை போலவே பர்வதம்மாவுக்கும் செல்வாக்கு அதிகம்.
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்தை சேர்ந்த சாலிகிராமா என்ற கிராமத்தில் 1939-ம் ஆண்டு பிறந்தவர் பர்வதம்மா. இவரது பெற்றோர் அப்பாஜி கவுடா – லட்சுமம்மா. தனது 13-வது வயதில் ராஜ்குமாரை மணந்தார்.
திருமணத்திற்கு பின்னர் ராஜ்குமாரும், இவரும் இணைந்து வஜ்ரேஸ்வரி கம்பைன்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்தையும், பூர்ணிமா என்டர்பிரைசஸ் என்ற பட வினியோக நிறுவனத்தையும் தொடங்கினர்.
ராஜ்குமார் கதாநாயகனாக நடித்த திருமூர்த்தி படம்தான் பர்வதம்மா தயாரித்த முதல் படமாகும். இவரது 3 சகோதரர்களும் கூட திரைப்படத் தயாரிப்பாளர்கள் தான். 80 படங்களுக்கும் மேல் தயாரித்துள்ளார் பர்வதம்மா.
ராஜ்குமார் -பர்வதம்மாவுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகன் சிவராஜ்குமார் கன்னட பட உலகில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் பங்காரப்பாவின் மகளை திருமணம் செய்தார்.
பர்வதம்மாவின் 2-வது மகன் ராகவேந்திரா ராஜ்குமாரும், படங்களில் நடித்து வருகிறார். 3-வது மகன் லோகித் இவர் தனது பெயரை புனித் ராஜ்குமார் என மாற்றிக் கொண்டார். பர்வதம்மாவின் மகள்கள் பூர்ணிமா, லட்சுமி ஆகியோருக்கு திருமணம் ஆகிவிட்டது.
தனது பட நிறுவனம் மூலமாகவே தனது மகன்கள் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் மற்றும் புனித்ராஜ் குமாரையும் கதாநாயகனாக ஆக்கினார்.
பர்வதம்மாவின் கணவர் நடிகர் ராஜ்குமார் 2000-ம் ஆண்டில் சந்தன கடத்தல் வீரப்பனால் காட்டுக்குள் கடத்திச் செல்லப்பட்டார்.
100 நாட்களுக்கு பின் பெரும் தொகை கொடுத்து மீட்கப்பட்டார். 2006-ம் ஆண்டு ராஜ்குமார் மரணம் அடைந்தார். தற்போது பர்வதம்மாவும் மரணம் அடைந்துவிட்டார்.