கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பாதுகாப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தி அமெரிக்கா அதிர்ச்சி அளித்துள்ளது.
ஓரே ஆண்டில் 9 ஏவுகணை சோதனைகளை வடகொரியா செய்து மேற்குலக நாடுகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
அதனையடுத்து அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் மற்றும் ஐ.நா சபை ஆகியவை கண்டனங்கள் தெரிவித்தும் வடகொரியா தனது சோதனைகளை நிறுத்தவில்லை.
இதனால், கொரிய தீபகற்பத்தில் போர்ப் பதற்ற நிலை நீடித்து வருகிறது.
இந்த நிலையில், வடகொரியாவை சமாளிக்கும் விதமாக ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் பாதுகாப்பு பரிசோதனையை அமெரிக்கா நடத்தியுள்ளது.
கலிபோர்னியா மாகாணத்திநடைபெற்ற இந்தச் சோதனையின் போது, பசுபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவிலிருந்து ஏவப்பட்ட மாதிரி ஏவுகணை இடைமறித்து அழிக்கப்பட்டது.
இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பெண்டகன் அறிவித்துள்ளது.
மேலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் சோதனையையும் அமெரிக்கா முதன் முறையாக வெற்றிகரமாக நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.