சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் 4வது ஆட்டம் இந்தியா – பாகிஸ்தான் இடையே இன்று நடைபெற இருக்கிறது. பாகிஸ்தானுடனான நாளைய போட்டியில் இந்திய அணி விளையாட கூடாது என்று பாகிஸ்தான் படையால் சிதைத்து கொல்லப்பட்ட இந்திய பாதுகாப்புப் படை வீரர் பிரேம் சாகரின் குடும்பத்தினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
பாகிஸ்தானுடனான கிரிக்கெட் போட்டியை தாங்கள் முற்றிலுமாக வெறுக்கிறோம். அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தானுடன் இந்தியா நட்பு பாராட்டக் கூடாது. எங்களது வலியை அரசு புரிந்து கொண்டு போட்டி நடக்காமல் இருக்க ஆவண செய்ய வேண்டும் என்று பிரேம் சாகரின் மகன் இஷார் சந்திரா வலியுறுத்தியுள்ளார். மேலும் பிசிசிஐ-க்கும் தாம் கடிதம் எழுதியுள்ளதாக அவர் கூறினார்.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை கட்டுப்பாட்டுக்கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்திய ராணுவ வீரர்களை மட்டுமல்லாது அப்பாவி மக்களையும் குறிவைத்து பாகிஸ்தான் துருப்புகள் தாக்குதல்கள் நடத்துகின்றன.
இவ்வாறு கடந்த மாத இறுதியில் காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தின் கிருஷ்ணகாதி பகுதியில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்த இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானின் ராக்கெட் வீச்சிலும், துப்பாக்கிச்சூட்டிலும் சிக்கி, இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி பரம்ஜீத் சிங் மற்றும் எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த தலைமை காவலர் பிரேம் சாகர் ஆகியோர் பலியாகினர். அவர்களது தலைகளைத் துண்டித்து, உடல்களை சிதைத்து பாகிஸ்தான் படையினர் நடத்திய வெறியாட்டம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.