ஐ.டி. கம்பெனியில் பணிபுரியும் நாயகன் யுவன், நாயகி ஸ்ரவியாவை காதலித்து வருகிறார். இவர்களது காதல் வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும் நிலையில், யுவனுக்கு வேலை பறிபோகிறது. இதையடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கையில், யுவனை எம்.எல்.எம். கம்பெனியில் இண்டர்வியூவுக்கு செல்லுமாறு தூண்டுகிறாள் நாயகி.
யுவனும், நாயகியின் பேச்சை தட்டாமல் எம்.எல்.எம் கம்பெனிக்கு இண்டர்வியூவுக்கு போகிறார். அது பிடித்துப் போகவே வேலையில் சேர்ந்து நல்ல நிலைமைக்கு செல்கிறார்.
இந்நிலையில், யுவன்-ஸ்ரவியாவின் காதல் ஸ்ரவியாவின் அண்ணனும் போலீசுமான ரியாஸ்கானுக்கு தெரிய வருகிறது. ஏற்கெனவே, யுவனுடன் மோதலில் இருக்கும் ரியாஸ்கானுக்கு இவர்களது காதல் பிடிக்காமல் போகவே, இருவரையும் அழைத்து எச்சரிக்கிறார். ஆனால், ரியாஸ்கானின் எச்சரிக்கையை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அதனால், எப்படியாவது யுவனை பழிவாங்கவேண்டும் என்று ரியாஸ்கான் திட்டம் தீட்டி வருகிறார்.
அதன்படி, எம்.எல்.எம். கம்பெனி ஒன்றை தொடங்கி, அதில் மோசடிகள் செய்து, அதை யுவன் செய்ததாக சொல்லி மாட்டிவிடுகிறார். இதனால், யுவன் சிறைக்கு செல்ல நேரிடுகிறது.
கடைசியில், யுவன் இந்த பிரச்சினைகளில் இருந்து எப்படி மீண்டார்? தனது காதலியுடன் மீண்டும் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.
எம்.எல்.எம். கம்பெனியில் பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன என்று பரவலாக ஒரு பேச்சு நடைபெற்று வரும் நிலையில், இதன் மூலம் நல்ல வருமானமும் கிடைக்கும், இதனால் நாட்டில் வேலையில்லா திண்டாட்டமும் ஒழியும் என்பதை இப்படத்தில் சொல்ல வந்திருக்கிறார்கள் இயக்குனர்கள் சூரியனும், விஜய் ஆர் ஆனந்தும். ஆனால், மக்கள் மனதில் எம்.எல்.எம் கம்பெனிகளை பற்றிய தவறான விஷயங்கள் ஆழமாக பதிந்துவிட்ட நிலையில், இந்த நல்ல விஷயம் மக்களை எப்படி சென்றடையும் என்பது ஐயமே. இருப்பினும், நாட்டில் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்பதற்கான விழிப்புணர்வு படமாக கொடுத்த இவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கலாம்.
நாயகன் யுவன் இதுவரையிலான படங்களில் எப்படி அப்பாவித்தனமாக தனது முகத்தை வைத்துக் கொண்டு நடித்தாரோ, அதேபோல் இப்படத்திலும் நடித்திருக்கிறார். ஒரு ஐ.டி. கம்பெனியில் பணிபுரியும் இளைஞனாக நம்மால் இவரை யூகித்து பார்க்க முடியவில்லை. அதேபோல், நடிப்பிலும் இன்னும் கொஞ்சம் தேறவேண்டும்.
நாயகி ஸ்ரவியா பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். நடிப்பிலும் இன்னும் கொஞ்சம் அழகு கூட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது. காமெடி என்ற பெயரில் பவர் ஸ்டார் செய்யும் அட்டகாசங்கள் எல்லாம் வெறுப்பைத்தான் வரவழைத்திருக்கின்றன. ரியாஸ்கான் போலீஸ் வில்லனாக வந்து மிரட்டியிருக்கிறார். மற்றொரு ஹீரோ என்று சொல்லும் அளவுக்கு இவருடைய கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.
ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் ரசிக்க தூண்டுகிறது. பின்னணி இசையிலும் படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறார். அருண் மொழி சோழனின் கேமரா இன்னும் கொஞ்சம் காட்சிகளை மெருகேற்றியிருக்கலாம்.
மொத்தத்தில் ‘விளையாட்டு ஆரம்பம்’ வெற்றிக்கான போராட்டம்.