நாயகன் இந்த்ரா அவனது நண்பர்களுடன் இணைந்து, சமூக வலைதளங்களில் பெண்கள் பெயரில் போலி கணக்கு தொடங்கி அதன் மூலம் சில இளைஞர்களை ஏமாற்றி வருகிறார். இவ்வாறாக ஒரு இளைஞரை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் போது, கார் விபத்தில் சிக்கி இந்த்ராவின் காதுக்கும், மூளைக்கும் செல்லும் நரம்பு துண்டிக்கப்படுகிறது. இதையடுத்து யார் பேசினாலும், அது 5 நொடிகள் கழித்தே இந்த்ராவின் காதுக்கு கேட்கும் என்று மருத்துவர்கள் கூறிவிடுகின்றனர்.
இதனை சரிசெய்ய பல மருத்துவர்களை நாடியும், அதற்கான தீர்வு மட்டும் கிடைக்கவில்லை. எனினும் தொடர்ந்து பல்வேறு மருத்துவர்களை சந்தித்து வரும் இந்த்ரா, ஒரு கட்டத்தில் மருத்துவராக வரும் பாண்டியராஜனை சந்திக்கிறான். ராசியில்லாத மருத்துவர் என்று பெயர் வாங்கிய பாண்டியராஜனிடம் சிகிச்சைக்காக யாரும் செல்வதில்லை.
ஆனால் இந்த்ரா மட்டும் பாண்டியராஜிடம் சிகிச்சை பெறுகிறான். இது ஒருபுறம் இருக்க நாயகி அதிதி, படம் வரையும் கலைஞராக இருந்து வருகிறார். நாயகன் சென்ற அதே மருத்துவமனையில் மனரீதியில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவர்களிடம் பேசி, அப்படியே வரையும் கலைஞராக பணியாற்றி வருகிறாள். இந்நிலையில், அதிதியை சந்திக்கும் இந்த்ராவுக்கு அவள் மீது காதல் வருகிறது.
இதனிடையே இந்த்ராவிடம் பேஸ்புக் மூலம் ஏமாற்றப்பட்ட இளைஞர் தன்னை ஏமாற்றியவர்களை பழிவாங்க முயற்சி செய்கிறான். மறுபுறத்தில் தனது காதலை அதிதியிடம் வெளிப்படுத்த முடியாமல் இந்த்ரா தவிக்கிறான். கடைசியில் இந்த்ராவின் காதல் வெற்றி பெற்றதா? அவனது பிரச்சனை சரியானதா? பாதிக்கப்பட்ட அந்த இளைஞன் இந்த்ராவை பழிவாங்கினானா? என்பது படத்தின் மீதிக்கதை.
இந்த்ரா படத்தில் மிகையான நடிப்பை வெளிப்படுத்தி பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறார். ஓரளவுக்கு கதைக்கு தேவையான நடிப்பை கொடுத்திருந்தாலே போதுமானது. இருப்பினும், ஒருசில இடங்களில் இவரது நடிப்பும், முகபாவணையும் ரசிக்கும்படி இருக்கிறது.
கேரள வரவான அதிதி படம் முழுக்க அழகு பதுமையாக வலம்வந்திருக்கிறார். அவரது நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. பாண்டியராஜன் தனது அனுபவ நடிப்பில் தனக்கே உண்டான நக்கலுடன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இருப்பினும், அவரை முழுமையாக பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. பிற நடிகர்களும் படத்தின் கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி கதை ஓட்டத்திற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார்கள்.
நாயகன் இந்த்ராவே படத்தை இயக்கவும் செய்திருக்கிறார். வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து இயக்கியிருக்கும் இந்த்ரா அதனை காட்சிப்படுத்துவதில் கொஞ்சம் தடுமாறியிருக்கிறார். ஒன்று இயக்கத்தில் கவனம் செலுத்தியிருக்கலாம், அல்லது நடிப்பிலாவது கவனம் செலுத்தியிருக்கலாம். அப்படியில்லாமல் இரண்டிலும் சரிவர கவனம் செலுத்தாமல் படத்தை சொதப்பியிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
எஸ்.ஜே.சூர்யா பாஷையில் சொல்ல வேண்டுமானால், இருக்கு…. ஆனால் இல்லை… அந்த வகையில் படத்தை இயக்கியிருக்கிறார். படத்தில் என்ன இருக்கு என்றும் சொல்லமுடியவில்லை. என்ன இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. எனினும் வசனங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.
படத்தின் பின்னணி இசையில் இந்த்ராவின் பங்கு சிறப்பு. பின்னணி இசை படத்திற்கு பலம் அளித்தாலும், பாடல்கள் ரசிக்கும்படியாக இல்லை. ஸ்ரீதரின் ஒளிப்பதிவில் படம் ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் ‘ட்யூப்லைட்’ பளிச்சிடவில்லை.