நட்டி நடராஜ், ரூஹி சிங், அர்ஜுனன் மூன்று பேரும் விலையுயர்ந்த கார்களை விற்பனை செய்யும் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர். எம்.எல்ஏ. ஒருவர் தனது மகளுக்கு கார் ஒன்றை பரிசளிக்க எண்ணி, நட்டி பணிபுரியும் கார் கம்பெனியில் ஒரு காரை புக் செய்கிறார். அந்த காரை எம்.எல்.ஏ-வின் வீட்டில் கொண்டு டெலிவரி செய்ய நட்ராஜ், அர்ஜுன் இருவரும் செல்லும்போது, மர்ம நபர்கள் வழிமறித்து அந்த காரை கடத்திச் செல்கின்றனர்.
அந்த காரை நட்ராஜும் அர்ஜுனனும் சேர்ந்துதான் கடத்தியதாக போலீஸார் இருவரையும் கைது செய்கின்றனர். மேலும் அந்த கார் கம்பெனியில் இருந்து ரூஹி சிங், நட்ராஜ், அர்ஜுனன் 3 பேரும் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர். அதேவேளையில் அவர்கள் வேறு எந்த கம்பெனியிலும் சேரமுடியாதபடி கருப்பு முத்திரையும் குத்தப்படுகின்றனர்.
இதையடுத்து ஜெயிலில் இருக்கும் இருவரையும் ரூஹி சிங் பெயிலில் எடுக்க, தனது ஜெயில் நட்பின் மூலம் நட்டி தனது நண்பர்களுடன் இணைந்து கார் திருட்டு தொழிலில் ஈடுபடுகின்றார். அதில் முதல் திருட்டிலேயே அவருக்கு ரூ.10 கோடி பணமும் கிடைக்கிறது. அதன் பின்னர் முனிஸ்காந்தும் இவர்களது கூட்டணியில் சேருகிறார்.
இந்நிலையில், மதுரையில் தாதாவான சரத் லோகித்ஸ்வா கைவசம் இருக்கும் 10 சொகுசு கார்களை கடத்தி வரும்படி நட்டிக்கு உத்தரவு வருகிறது. இதையடுத்து அந்த கார்களை கடத்துவதற்காக, தனது குழுவுடன் மதுரை செல்லும் நட்டி, சரத் லோகித்ஸ்வாவின் கார்களை கடத்த திட்டம் போடுகிறார். அப்போது நட்டியிடம் இருந்து மர்மநபர்கள் கடத்தி சென்ற காரும் அங்கு இருக்க, அதை பார்த்த நட்டி அந்த காரையும் மீட்க போராடுகிறார்.
இறுதியில், நட்டி தன்னிடமிருந்து கடத்தப்பட்ட காரை மீட்டு அதன் உரிமையாளரிடம் கொண்டு சேர்த்தாரா? சரத் லோகித்ஸ்வாவிடம் உள்ள 10 சொகுசு கார்களையும் அவர் திருடினாரா? நட்டியிடம் இருந்து சரத் லோகித்ஸ்வா ஏன் காரை கடத்தி வந்தார்? என்பது படத்தின் மீதிக்கதை.
‘சதுரங்க வேட்டை’ படத்திற்கு பிறகு நட்டி மீண்டும் ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறார். அவருக்கு ஏற்ற கதைக்களம். அது சிறப்பாக அமைந்ததால், அதற்கேற்றவாறு இவரது நடிப்பும் சிறப்பாக அமைந்திருக்கிறது. நட்டியின் படபட பேச்சும், வசனங்களும் ரசிக்கும்படி இருக்கிறது.
நடிப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதை ரூஹி சிங்கிற்கு அமையவில்லை என்றாலும், காட்சிக்கு பக்கபலமாக தேவையான இடங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார். அர்ஜுனன் காமெடியிலும், நடிப்பிலும் ரசிக்க வைத்திருக்கிறார். முனிஸ்காந்த் அவருக்கே உரிய பாணியில் ரசிக்க வைத்திருக்கிறார்.
சரத் லோகித்ஸ்வா ஒரு மிரட்டல் வில்லனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நட்டிக்கு எதிராக அவரது பேச்சும், நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. அதுல் குல்கர்னி குறைவான காட்சிகளிலே வந்தாலும் ரசிக்கும்படி இருக்கிறது. படத்தில் அவரது நடிப்புக்கு தீனி போடும்படியான கதாபாத்திரம் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இயக்குநர் தாஜ் ஒரு வித்தியாசமான கதையை சிறப்பாக இயக்கியிருக்கிறார். நட்டி, அர்ஜுனின் கதாபாத்திரம் திரையில் பார்க்க ரசிக்கும்படி இருக்கிறது. அதற்கேற்றாற்போல் திரைக்கதையை அமைத்திருப்பது சிறப்பு. வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம். தனது வாழ்க்கையை கெடுத்த சரத் லோகித்ஸ்வாவை பழிவாங்கும் நட்டியின் துடிப்பும், அதற்கேற்ற காட்சிகளும் ரசிக்கும்படி இருக்கிறது.
மகேஷ் முத்துச்சாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக இருக்கிறது. ஸ்ரீகாந்த் தேவாவின் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் ‘போங்கு’ கெத்தான கேங்கு.