அரியானா மாநிலத்தில் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணின் குழந்தையை தூக்கி வெளியே வீசிவிட்டு அப்பெண்ணை மூன்று பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியானா மாநிலம் குர்கான் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண் கடந்த மாதம் 29-ம் திகதி இரவில் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 9 மாத குழந்தையுடன் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு செல்வதற்காக ஆட்டோவில் ஏறியுள்ளார். ஆட்டோவில் ஏற்கனவே 3 நபர்கள் இருந்துள்ளனர்.
காந்த்ஷா என்ற பகுதியின் அருகே, ஆட்டோவில் இருந்த மூவரும் அப்பெண்ணை சீண்டியுள்ளனர். இதனால், அந்த குழந்தை அழுதுள்ளது. இதனையடுத்து, குழந்தையை ஆட்டோவிலிருந்து தூக்கி வெளியே வீசிய கொடூரர்கள், அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமையை அப்பெண் போலீசில் சென்று புகாரளித்துள்ளார். புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அப்பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தீவிர விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.