இதுவொரு கடினமான பயணமாக இருக்கும். சேதமடைந்த இந்த அணு உலைக்குள் இதற்கு முன்னால் அனுப்பப்பட்ட ரோபோக்கள் திரும்பவில்லை.
-
2011 ஆம் ஆண்டு ஜப்பான் கடற்கரையோரப் பகுதியை ஆழிப்பேரலை தாக்கியபோது 18 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். ஃபுகுஷிமா அணு மின்நிலையத்தையும் இந்த ஆழிப்பேரலை தாக்கி செர்நோபில் அணுமின் நிலைய பேரழிவுக்கு பின்னர், மிக மோசமான அணு விபத்தை உருவாக்கியது. இந்த அணு உலையின் பகுதிகள் இன்னும் அதிக அளவு கதிர்வீச்சு உடையதாக விளங்குகிறது. இதனை சுத்தப்படுத்த ரோபோக்கள் முக்கிய பங்காற்றுகின்றன.
-
அணு உலையில் நீர் புகுந்துள்ள பகுதிகளை ஆய்வு செய்ய “சிறிய சூரியமீன்” என்று அழைக்கப்படும் நீந்துகின்ற ரோபோ ஒன்றை தோஷிபா நிறுவனமும், விஞ்ஞானிகள் குழுவினரும் சேர்ந்து வடிமைத்திருக்கிறார்கள்.
-
விளக்குகள், பின் பகுதியிலிருந்து முன்னோக்கிச் செலுத்தும் திறனுடைய கருவிகள் ஆகியவற்றோடு இந்த கடும் நடவடிக்கையை மேற்கொள்வதற்காக, ரொட்டி அளவே இருக்கும் இந்த “சிறிய சூரியமீன்” ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
-
டோக்கியோவுக்கு அருகில் சோதனை நிலையத்தில் இந்த வாரம் இந்த மிக அழகான சிறிய ரோபோ நீரில் விடப்பட்டு சோதிக்கப்பட்டுள்ளது.
-
அங்குள்ள கப்பலில் நடத்தப்பட்ட ஒத்திகை ஆய்வில், இந்த “சிறிய சூரியமீன்” ரோபோ மெதுவாக நகர்ந்து சென்றது.
-
இந்த ரோபோ, விஞ்ஞானிகள் குழு ஒன்றால் இயக்கப்படுகிறது. இந்த ரோபோ எடுக்கின்ற படங்கள் அல்லது சேகரிக்கும் தரவுகளை அனுப்புவதற்காக, தரவுக் கேபிள் (வட இணைப்பு) ஒன்று எப்போதும் இந்த விஞ்ஞானிகள் குழுவோடு இணைக்கப்பட்டிருக்கிறது.
-
அணு உலைக்குள் இந்த ரோபோ நீந்துகிறபோது, மிக முக்கிய தரவுகளை சேகரித்து அனுப்பும் என்று நம்பப்படுகிறது. அதன் மூலம் சேதமடைந்துள்ள இந்த அணு உலையில் இருந்து மேலதிக கதிர்வீச்சு கழிவுகளை வல்லுநர்கள் அகற்ற முடியும்.
இந்த சிறிய கருவிக்கு இந்த ஆய்வு கடுமையான பயணமாக இருக்கும். இதற்கு முன்னால், தொலைவில் இருந்து இயக்கப்படும் வகையில் அனுப்பப்பட்ட ரோபோக்களால் இவ்வித நடவடிக்கையை நிறைவேற்ற இயலவில்லை. அவை அணு உலையில் சிக்கிக்கொண்டன. அவற்றின் இயக்கம் நின்றது அல்லது செயல்படாமல் போய்விட்டது. கதிர்வீச்சு அளவு மிகவும் அதிகமாக இருக்கின்ற காரணத்தால், மனிதர்கள் சில வினாடிகளுக்குள் உயிரிழக்க நேரிடும். அந்த “சிறிய சூரியமீன்” இந்த நடவடிக்கையை நிறைவேற்றும் என்ற வலுவான நம்பிக்கையுள்ளது. அணு உலைக்குள் இது அடுத்த மாதம் அனுப்பப்படவிருக்கிறது.