`மார்த்தா` என்ற மாஸ்டினோ வகை நாய், இந்த ஆண்டின் “அசிங்கமான” நாயாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
29-ஆவது ஆண்டாக இந்த வருடத்தின் போட்டி கலிஃபோர்னியாவின், பெட்டலுமாவில் நடைபெற்றது.
தனது உரிமையாளர் ஷர்லி சிண்ட்லருடன் பங்குபெற்ற மார்த்தா, 13 போட்டியாளர்களை தோற்கடித்து வெற்றிபெற்றது.
மார்த்தாவிற்கு பரிசாக கோப்பையும், 1500 அமெரிக்க டாலர்களும் வழங்கப்பட்டது.
பார்வையாளர்களை கவர்ந்த, கீழ் தாடையில் அதிக சதைக் கொண்ட மாஸ்டினோ இனத்தைச் சேர்ந்த இந்த நாய், ஊடகங்களில் காட்சியளிப்பதற்காக நியூயார்க்கிற்கு செல்லவுள்ளது என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கண்காட்சியில் பங்குபெற்ற நாய்கள், இனப்பெருக்கம் செய்து விற்பனை செய்யும் இடங்களிலிருந்தும், நாய்கள் அடைத்து வைக்கப்படும் இடங்களிலிருந்தும் மீட்கப்பட்ட நாய்கள் ஆகும்.
மார்த்தாவும் அவ்வாறு மீட்டெடுக்கப்பட்ட நாய் என்றும், அது பார்வையை இழந்திருக்கக்கூடும் என்றும் அதன் உரிமையாளர் சிண்ட்லர் தெரிவித்தார்.
பல அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு மார்த்தாவால் தற்போது பார்க்க முடிகிறது என்றும், வலியில்லாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நோக்கம் எதுவுமின்றி, தற்செயலாக மேடையில் திடீரென பரப்பிக் கொண்டு உட்கார்ந்த மார்த்தா நடுவர்களை கவர்ந்துவிட்டது என அசோசியேடட் பிரஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
தங்களின் முதல் அனுபவத்தை கருத்தில் கொண்டு வழக்கத்திற்கு மாறான பண்புகள், ஆளுமை, பார்வையாளர்களின் வரவேற்பு, ஆகியவற்றைக் கொண்டு நடுவர்கள் தீர்ப்பளித்ததாக அசோசியேடட் பிரஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
“இந்த போட்டி நாய்களை தத்தெடுப்பது குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்காக என்றும், அன்பான துணையாக இருப்பதால் அவற்றின் உடல்நிலை ஒரு விஷயமல்ல” என்றும் இந்த போட்டிக்கான வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பை நாய்கள் ரசித்ததாகவே தெரிகிறது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.